UPDATED : ஜூலை 04, 2026 02:52 PM
ADDED : ஜூலை 04, 2026 11:40 AM
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே, சாண எரிவாயு கலன் அமைத்தது குறித்து கூறும், ஈரோடு மாவட்டம், மேவாணி கிராமத்தை சேர்ந்த 60 வயதான, உமா மகேஸ்வரி:
என் மாமனார் குடும்பத்திற்கு 4 ஏக்கர் நிலம் உள்ளது. 2 ஏக்கரில் வாழையும், 2 ஏக்கரில் நெல்லும் பயிர் செய்து வருகிறோம். நீண்டகாலமாகவே மாடுகள் வளர்க்கிறோம்.
தற்போது, அமெரிக்கா - ஈரான் போர் பதற்றத்தால், உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், எங்களுக்கு காஸ் சிலிண்டர் குறித்து கவலை கிடையாது. காரணம், நாங்கள் சாண எரிவாயு கலன் அமைத்திருப்பது தான்!
கடந்த 40 ஆண்டுகளுக்கு முன், 25,000 ரூபாய் செலவு செய்து, சாண எரிவாயு கலனை அமைத்தார், என் மாமனார். அந்த காலத்தில் இதை அமைக்க, 20,000 ரூபாய் வங்கி கடனும், 5,000 ரூபாய் மானியமும் கொடுத்தனர். அன்று முதல் இன்று வரை எங்கள் வீட்டில் மூன்று வேளை சமையல், குளிக்க வெந்நீர் போடுவது என்று முழுக்க முழுக்க சாண எரிவாயு கலனை தான் பயன்படுத்துகிறோம். இதுவரை, ஒரு காஸ் சிலிண்டர் கூட வாங்கியது இல்லை.
மொத்தம் 8 அடி விட்டம், 15 அடி ஆழத்தில் சிமென்ட் தொட்டி அமைத்து, 2.5 அடி உயரத்தில் டிரம் அமைத்துள்ளோம். தொட்டியில் கரைத்து ஊற்றும் சாணத்தில் இருந்து மீத்தேன் வாயு உற்பத்தியாகி, டிரம்மில் சேகரமாகும். டிரம் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள குழாய் வழியாக எரிவாயு, சமையலறைக்கு வரும்.
எரிவாயு கலன் நல்ல திடமான உலோகத்தில் அமைக்கப்பட்டிருப்பதால், 40 ஆண்டுகளாகியும் கூட நல்ல நிலையில் இருக்கிறது. இரண்டு நாளைக்கு ஒருமுறை, 15 கிலோ சாணத்தை தண்ணீரில் கரைத்து ஊற்றினால் போதும். இரண்டு மாடுகள் வளர்த்தாலே தாராளமாக இந்த அளவு சாணம் கிடைக்கும். 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை டிரம்மை வெளியில் எடுத்து சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு, 5,000 ரூபாய் வரை செலவாகும்.
நாம் பயன்படுத்தாத எரிவாயு வெளியில் சென்றுவிடும். வெடிக்கும், தீப்பிடிக்கும் என்ற பயமெல்லாம் இதில் கிடையாது. 100 சதவீதம் பாதுகாப்பானது. வாயு உற்பத்தியான பின், கலனில் இருந்து வெளிவரும் கழிவை வயலுக்கு உரமாக பயன்படுத்துகிறோம். சாண எரிவாயு கலன் அமைக்க விரும்புவோருக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலகத்தில் வழிகாட்டுகின்றனர். இப்போதும் இதற்கு மானியம் கிடைக்கிறது.
தொடர்புக்கு: 94894 48249.
