இருமுடியுடன் விமானத்தில் பயணிக்கலாம்: சபரிமலை பக்தர்களுக்கு அனுமதி
இருமுடியுடன் விமானத்தில் பயணிக்கலாம்: சபரிமலை பக்தர்களுக்கு அனுமதி
ADDED : அக் 26, 2024 07:40 PM

சபரிமலை: இந்தாண்டு சபரிமலை சீசனையொட்டி, விமானம் பயணம் மூலம் சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் இருமுடி கட்டுடன் எடுத்துச்செல்ல மத்திய விமான போக்குவரத்துதுறை அனுமதி அளித்து சிறப்பு சலுகை வழங்கியுள்ளது.
இந்தாண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நவ.15-ம் தேதி திறக்கப்படுகிறது. அன்றைய தினம் புதிய மேல்சாந்திகள் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள். முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை 2025 ஜன.14-ம் தேதி நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் நடப்பு சீசனையொட்டி சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் தற்போது முதல் ஜன. 20-ம் தேதி வரை சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் விமான பயணத்தின் போது இருமுடி கட்டுடன் நெய், தேங்காய் உள்பட பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள். நடப்பு மண்டல, மகர விளக்கு பூஜை சமயத்தில் மட்டுமே சிறப்பு சலுகை செல்லுபடியாகும். பிற பூஜை காலங்களில் கிடையாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.