டில்லி பெண்ணிடம் ரூ.21 லட்சம் மோசடி பஞ்சாபை சேர்ந்த இருவர் சிக்கினர்
டில்லி பெண்ணிடம் ரூ.21 லட்சம் மோசடி பஞ்சாபை சேர்ந்த இருவர் சிக்கினர்
ADDED : ஜூன் 19, 2025 07:09 PM
புதுடில்லி:டில்லியை சேர்ந்த பெண்ணிடம், ஆன்லைனில் முதலீடு செய்வது சிறந்தது என ஆசை வார்த்தை கூறி, 21 லட்ச ரூபாயை, போலி நிறுவனங்களில் முதலீடு செய்ய வைத்து, அந்த பணத்தை சுருட்டிய இருவர், பஞ்சாபில் கைது செய்யப்பட்டனர்.
பவன், 29, என்ற நபர், பஞ்சாபின் சண்டிகர் நகரை சேர்ந்தவர். அதே மாநிலத்தின் பெரோஸ்பூர் என்ற நகரை சேர்ந்தவர் மன்கிராத், 36. இருவரும், அடிக்கடி நேபாளம் சென்று, சீனாவை சேர்ந்தவர்களுடன் இணைந்து, இந்தியாவில் பலரை, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வந்துள்ளனர்.
அவர்களின் ஆசை வார்த்தைக்கு பலியான, டில்லி அசோக் விஹார் பகுதியை சேர்ந்த மீனாட்சி சர்மா என்ற பெண்ணிடம், ஆன்லைனில் முதலீடு செய்வது சிறந்தது என ஆசை கூறி, பல தவணைகளாக, 21 லட்சம் ரூபாயை முதலீடு செய்ய வைத்தனர்.
அதற்காக அவர்கள், பிரபல நிதி நிறுவனத்தின் பிரதிநிதிகள் என கூறி, அதற்காக போலியாக தயாரித்த முகவரிகள் மற்றும் ஆதாரங்களை காட்டினர். அவர்கள் பேசியதை உண்மை என நம்பிய அந்த பெண்ணிடம், அவரின் முதலீடு உயர்ந்து வருவதையும் காட்டியுள்ளனர்.
இதற்காக போலி இணையதளம் ஒன்றை உருவாக்கி, அதன் வாயிலாக மோசடி செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் பணத்தை அந்த பெண் எடுக்க முயன்ற போது, பணம் கிடைக்கவில்லை. போன் செய்த போது, இருவரும் எடுக்கவில்லை. டில்லி போலீசில் அவர் புகார் அளித்தார்.
டில்லி போலீசார் பஞ்சாப் சென்று, இருவரையும் கைது செய்து, அவர்கள் வசமிருந்த பல மோசடி ஆதாரங்களை கைப்பற்றினர். எனினும், அவர்கள் மோசடி செய்த பணத்தை கைப்பற்றவில்லை.
நேபாளத்திற்கு அவர் அடிக்கடி சென்று வந்ததற்கான, அவரின் விமான பயண டிக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் யார், யாரிடம் எவ்வளவு மோசடி செய்துள்ளனர் என விசாரிக்கின்றனர்.