ADDED : பிப் 17, 2025 02:08 AM

ஹைதராபாத்: நிதி நிறுவனம் துவக்கி, 850 கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், இருவரை தெலுங்கானா போலீசார் நேற்று கைது செய்தனர்.
தெலுங்கானாவின் ஹைதராபாதில் கடந்த 2021ல் 'பால்கன் கேபிடல் வெஞ்சர்ஸ்' என்ற நிதி நிறுவனம் துவங்கப்பட்டது.
'கேபிடல் புரொடெக் ஷன் போர்ஸ் பிரைவேட் லிமிடெட்' மற்றும் பால்கன் இன்வாய்ஸ் டிஸ்கவுன்டிங் பிளாட்பார்ம்' என்ற துணை நிறுவனங்களும் உருவாக்கப்பட்டன.
குறுகிய கால வைப்புத் தொகைக்கு அதிக வட்டியுடன் சேர்த்து கூடுதல் தொகை தரப்படும் என விளம்பரம் செய்யப்பட்டதை அடுத்து, ஏராளமானோர் அந்த நிறுவனங்களில் முதலீடு செய்தனர்.
வசூலிக்கப்பட்ட 1,700 கோடி ரூபாயில், சில நுாறு கோடி ரூபாய் பழைய முதலீட்டாளர்களுக்கு திருப்பி தரப்பட்டது. கடந்த ஜனவரியுடன் நிறுவனங்கள் மூடப்பட்டதால், முதலீட்டாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இது குறித்து ஹைதராபாத் க்ரைம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான பால்கன் கேபிடல் வெஞ்சர்ஸ் நிறுவன மேலாண் இயக்குனர் அமர்தீப் குமார், உயர் பொறுப்பில் இருந்த ஆர்யன் சிங், யோகேந்தர் சிங் உட்பட 19 பேர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய கேபிடல் புரொடெக் ஷன் போர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் துணை தலைவர் பவண் குமார், பால்கன் இன்வாய்ஸ் டிஸ்கவுன்டிங் பிளாட்பார்ம் நிறுவனத்தின் தலைவர் காவ்யா ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், 850 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டனர்.
'சேகரிக்கப்பட்ட தொகை பல்வேறு போலி நிறுவனங்களுக்கு திருப்பிவிடப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்றனர்.

