ADDED : ஆக 13, 2025 02:31 AM
திருவனந்தபுரம்:திருவனந்தபுரம் அருகே பெண்ணிடம், நகை திருடிய இரு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், வெட்டுக்காடு சர்ச்சில் ஆக., 8ல் பிரார்த்தனைக்காக வந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 4 சவரன் தங்க செயின் திருடு போனது. அவர், வலியத்துறை போலீசில் புகார் செய்தார். போலீசார், 'சிசிடிவி.,' கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இரு பெண்கள் ஆட்டோவில் அவசரமாக ஏறி செல்வது தெரிந்தது. ஆட்டோ டிரைவரிடம் விசாரித்தபோது, கழக்கூட்டம் ரயில் நிலையம் அருகே அவர்களை இறக்கி விட்டதாக தெரிவித்தார்.
அங்கு, போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்குரிய வகையில் நின்ற இரு பெண்களிடம் விசாரித்தனர். அவர்கள், துாத்துக்குடி மாவட்டம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கொடக்காத்தி, 48, அவரது தங்கை பழனியம்மா, 45, என தெரிந்தது
செயின் திருடியதை அவர்கள் ஒப்பு கொண்டனர். செயின் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

