காருக்குள் ஏறிய 2 வாலிபர்கள் இளம்பெண்ணுக்கு 'டார்ச்சர்'
காருக்குள் ஏறிய 2 வாலிபர்கள் இளம்பெண்ணுக்கு 'டார்ச்சர்'
ADDED : பிப் 01, 2025 02:45 AM
கம்மனஹள்ளி: வாடகை காருக்குள் அத்துமீறி ஏறி, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு வாலிபர்களை போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரு, கம்மனஹள்ளி சிக்கமன லே - அவுட்டில் இருந்து ஒயிட்பீல்டுக்கு செல்ல, கடந்த 27 ம் தேதி அதிகாலை 2:00 மணிக்கு 25 வயது இளம்பெண், வாடகை கார் முன்பதிவு செய்தார். கார் வந்ததும் காருக்குள் ஏறி அமர்ந்தார்.
அப்போது காருக்குள் அத்துமீறி ஏறிய இரண்டு வாலிபர்கள், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். இதனை தட்டி கேட்ட டிரைவரையும் மிரட்டினர்.
அதிர்ச்சி அடைந்த இளம்பெண் காரில் இருந்து இறங்கி ஓடினார். அவரை விரட்டி சென்ற அவர்கள், சாலையில் தள்ளினர். பின், அவரது ஆடைகளை அவிழ்க்க முயன்றனர். காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று இளம்பெண் அலறினார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதியினர் வெளியே வரவே, இரண்டு வாலிபர்களும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
சம்பவம் குறித்து பானஸ்வாடி போலீஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் இளம்பெண் புகார் செய்தார். இரண்டு வாலிபர்கள் மீதும் வழக்குப் பதிவானது. சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று போலீசார் விசாரித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை என்பது தெரிந்தது.
இதனை பயன்படுத்திய வாலிபர்கள், பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரிந்தது. சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்; வாலிபர்களையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கார் டிரைவருக்கும் தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடத்தப்பட்டது. ஆனால், அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.