மஹா., எதிர்க்கட்சி கூட்டணியில் மோதல்: சரத்பவார் உதவியை நாடும் காங்., உத்தவ் தாக்கரே?
மஹா., எதிர்க்கட்சி கூட்டணியில் மோதல்: சரத்பவார் உதவியை நாடும் காங்., உத்தவ் தாக்கரே?
UPDATED : அக் 20, 2024 09:39 PM
ADDED : அக் 20, 2024 09:31 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் தொகுதி பங்கீட்டில் ஏற்பட்டு உள்ள பிரச்னையை தீர்க்க தலையிடும்படி தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பினர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹாராஷ்டிரா சட்டசபைக்கு ஒரே கட்டமாக நவ.,20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டுகள் நவ.,23ல் எண்ணப்படுகின்றன. தற்போது பதவியில் உள்ள பா.ஜ., ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை தக்க வைப்பதில் உறுதியாக உள்ளன. இக்கூட்டணி, தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டது. பா.ஜ., முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
அதேபோல், காங்கிரஸ், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எதிரணியில் மகா விஹாஸ் அகாடி கூட்டணி, கடந்த முறை பாதியில் பறி கொடுத்த ஆட்சியை இந்த முறை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என முயன்று வருகிறது. ஆனால், தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் உத்தவ் தாக்கரே இடையே சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மஹா., மாநில தலைவர்களுக்கு தொகுதி பங்கீடு குறித்து முடிவு எடுக்க தெரியவில்லை என உத்தவ் தாக்கரே தரப்பை சேர்ந்த சஞ்சய் ராவத் விமர்சித்து இருந்தார்.
இந்த தேர்தலில் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கும் உத்தவ் தாக்கரே தரப்பினர், விதர்பா தொகுதியில் 12 தொகுதிகளை கேட்டு உள்ளது. ஆனால் இந்த தொகுதிகளை விட்டுக்கொடுப்பதில் காங்கிரஸ் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனால், அங்கு தொகுதி பங்கீட்டில் முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக மும்பை வட்டாரங்கள் கூறியதாவது: தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டதால், இரு தரப்பினரும் சரத்பவாரின் உதவியை நாடி உள்ளனர். இப்பிரச்னையில் தலையிட்டு சுமூக தீர்வு காண உதவ வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். சிவசேனாவை சேர்ந்த அனில் பராப் மற்றும் ஆதித்யா தாக்கரே சரத்பவாரை சந்தித்து உள்ளனர். மூத்த காங்கிரஸ் தலைவர்களும் சரத்பவாருடன் தொடர்பில் உள்ளனர். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.