பீஹாரில் போட்டி தேர்வுகளுக்கு ஒரே மாதிரியாக ரூ.100 கட்டணம்
பீஹாரில் போட்டி தேர்வுகளுக்கு ஒரே மாதிரியாக ரூ.100 கட்டணம்
ADDED : ஆக 16, 2025 04:24 AM

பாட்னா: பீஹாரில் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும், ஒரே மாதிரியான கட்டணமாக 100 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படும் எனவும், அதே நேரத்தில் முதன்மைத் தேர்வுகளுக்கு எந்த கட்டணமும் இல்லை என்றும் முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
பீஹாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் -பாஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்குள்ள 243 தொகுதிகளுக்கு இன்னும் இரண்டு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
அதற்கு முன்னதாக நிதிஷ் குமார், மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
முதியோர், மாற்றுத்திறனாளிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் ஓய்வூதியத்தை உயர்த்தி அறிவித்து உத்தரவிட்டார். அந்த வகையில் தற்போது, அரசு வேலை களில் போட்டித் தேர்வுகளுக்கான முதல்நிலைத் தேர்வுகளுக்கு, 100 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
பீஹாரில் மாநில அரசுப் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தேர்வுகளை, பொதுப் பணியாளர் தேர்வாணையம், தொழில்நுட்பப் பணி ஆணையம், காவல்துறை துணைப் பணி ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்துகின்றன. ஒவ்வொன்றும், வெவ்வேறு அளவிலான தேர்வு கட்டணங்களை, இதுவரை வசூலித்து வந்தன. தற்போது, அனைத்து பணிகளுக்கும் ஒரே மாதிரியான தேர்வுக் கட்டணத்தை நிர்ணயித்து முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் முதல்நிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள் இறுதித் தேர்வு எழுத இனி, கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
''அரசு வேலைகளுக்குச் செல்ல விரும்பும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும்,'' என, அவர் கூறினார்.