ஏழைகளுக்கு உதவுவதில் அரசியல் வேண்டாம்; மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அழைப்பு
ஏழைகளுக்கு உதவுவதில் அரசியல் வேண்டாம்; மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி அழைப்பு
ADDED : பிப் 28, 2024 07:22 AM

தங்கவயல் ; ''ஏழைகளுக்கு உதவுவதில் அரசியல் வேண்டாம். அனைவருக்கும் வீடு வழங்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியம்,'' என, மத்திய சுரங்க துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
தங்கவயல் தங்கச் சுரங்க நிறுவனத்தில் கடைசியாக ஆஜர் பட்டியலில் இருந்த தொழிலாளர்கள் வசிக்கும் வீடுகளுக்கான உடைமை சான்றிதழ், தங்கவயல் கே.ஜி.எப்., கிளப் வளாகத்தில் நேற்று வழங்கப்பட்டது.
சுரங்கத் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி பேசியதாவது:
நாட்டின் முதல் நீர்மின் நிலையம் உருவானதே, தங்கவயலுக்காக தான். இங்குள்ள மக்களும் தங்கமானவர்கள்.
தங்கச் சுரங்க நிறுவனத்தில் கடைசியாக ஆஜர் பட்டியலில் இருந்த தொழிலாளர்களுக்கு உடைமை சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக 2,000 வீடுகளுக்கு வீட்டுரிமை சான்றிதழ் வழங்கப்படுகிறது. இங்குள்ள ஏழைகள் அனைவருக்கும் வீடுகள் வழங்குவதே, பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியம். ஏழைகளுக்கு உதவுவதில் அரசியல் வேண்டாம்.
தங்கச் சுரங்க நிலம் பற்றி முழுமையாக சர்வே நடத்தவில்லை. 3,000 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தங்கச் சுரங்க நிலம் பற்றி சர்வே நடத்த மாநில அரசு செயலருக்கும் கடிதம் எழுதி உள்ளேன்
தங்கவயல் மேம்பாட்டுக்கும், தங்கச் சுரங்க முன்னாள் தொழிலாளர் வீடுகள் பற்றி என்ன செய்ய வேண்டும் என்பதை காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா கருத்து தெரிவிக்கலாம். இது தொடர்பாக டில்லியில் உட்கார்ந்து பேசி தீர்வு காணலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுரங்கத்துறை அமைச்சக செயலர் பரிதா நாயக், தங்கச் சுரங்க நிறுவன அதிகாரி நன்மதி செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

