ADDED : செப் 27, 2011 11:52 PM

புதுடில்லி : கடந்த ஓராண்டில், மத்திய அமைச்சர்கள் வெளிநாடு சென்றதற்காக, 42 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர்கள் அடிக்கடி வெளிநாடு செல்வது வழக்கம்.
இதற்காக, அரசின் பணம் எவ்வளவு செலவாகிறது என்பது குறித்து, தகவல் அறியும் சட்டத்தின் கீழ், எஸ்.சி.அகர்வால் என்பவர் மனு செய்திருந்தார். அமைச்சர்களின் வெளிநாட்டு பயண விவரம் குறித்த தகவல், பல்வேறு அமைச்சகங்களிடம் உள்ளது. இவற்றை எல்லாம் சேகரித்துக்கொள்ளும்படி, கேபினட் செயலகம் தெரிவித்திருந்தது.மத்திய அமைச்சர்களின் வெளிநாட்டு பயண செலவு குறித்த தகவல் வேண்டி, எஸ்.சி.அகர்வால் கடந்த மூன்று ஆண்டுகளாக கோரி வந்தார்.
தலைமை தகவல் கமிஷனர் சத்தியானந்த் மிஸ்ரா, 'இந்த தகவல்களையெல்லாம் சம்பளம் மற்றும் கணக்குத்துறை அலுவலகம் சேகரித்து வைக்க வேண்டும்' என கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு மத்திய அமைச்சர்கள் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதற்காக, 41 கோடியே 92 லட்ச ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில், கேபினட் அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணத்துக்கு 37 கோடியே 16 லட்சமும், இணை அமைச்சர்களின் பயணத்துக்கு, 4 கோடியே 76 லட்சமும் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.