சுதந்திர போராட்ட வீரர்களை அவமதித்த பல்கலை கேள்வித்தாள்
சுதந்திர போராட்ட வீரர்களை அவமதித்த பல்கலை கேள்வித்தாள்
ADDED : ஜூலை 12, 2025 02:03 AM

கொல்கட்டா: மேற்கு வங்க பல்கலை தேர்வில், சுதந்திர போராட்ட வீரர்களை, தீவிரவாதிகளாக சித்தரித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசுக்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
சமூக வலைதளம்
இங்கு, மேற்கு மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள வித்யாசாகர் பல்கலையில், செம்ஸ்டர் தேர்வுகள் நடக்கின்றன.
வரலாறு பாடப்பிரிவின் ஆறாவது செமஸ்டர் தேர்வு கடந்த 9ம் தேதி நடந்தது.
அதில், 'மேதினிபூரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட மூன்று நீதிபதிகளின் பெயர்களை குறிப்பிடுக' என்ற கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.
இந்த கேள்வித்தாளை தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.,வின் சுவேந்து அதிகாரி குறிப்பிட்டுஉள்ளதாவது:
ஆங்கிலேயர் ஆட்சியின்போது நடந்த இச்சம்பவத்தில் ஈடுபட்டது நம் சுதந்திர போராட்ட வீரர்கள்.
அவர்களை தீவிரவாதிகள் எனக் குறிப்பிட்டு கேள்வி கேட்கப்பட்டு இருப்பது அவர்களை அவமதிக்கும் செயல். இதுபோன்ற சர்ச்சைக்குரிய கேள்விகளை இப்பல்கலை நிர்வாகம் கேட்பது, இது முதன்முறையல்ல.
கடந்த 2023ல் நடந்த தேர்விலும் வித்யாசாகர் பல்கலை சர்ச்சையில் சிக்கியது.
இத்தகைய தவறு செய்த பேராசிரியர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? ஆளும் திரிணமுல் காங்கிரசின் பேராசிரியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் என்பதால், பல்கலை நிர்வாகம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று பாடம்
இதற்கு, வித்யாசாகர் பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் தீபக் குமார் கவுர் கூறுகையில், “வரலாறு கேள்வித்தாளில், எழுத்துப் பிழை ஏற்பட்டுள்ளது. எனினும், இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டோம்.
''இது குறித்து தேர்வாணைய கண்காணிப்பாளர் மற்றும் வரலாற்று பாடப்பிரிவு தலைவர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளது,” என்றார்.