உ.பி., - பா.ஜ.,வில் மோதல்-; ஆர்.எஸ்.எஸ்., சமரசம்!
உ.பி., - பா.ஜ.,வில் மோதல்-; ஆர்.எஸ்.எஸ்., சமரசம்!
ADDED : பிப் 22, 2026 01:34 AM

யோ கி ஆதித்யநாத் உத்தர பிரதேச முதல்வராக, முதன் முறையாக 2017ல் பதவியேற்றார். 2022ல் நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். உத்தர பிரதேச சட்டசபை தேர்தல், 2027 மார்ச்சில் நடைபெற உள்ளது; மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்க, பா.ஜ., பல அதிரடி திட்டங்களை தீட்டியுள்ளது.
ஆனால், கட்சிக்குள் உள்குத்து ஏற்பட்டுள்ளது. துணை முதல்வராக உள்ள கேசவ் பிரசாத் மவுரியாவிற்கும், யோகிக்கும் ஆகாது. தன் எதிர்ப்பை வெளிப்படையாகவே தெரிவித்து வருகிறார் மவுரியா. ஆர்.எஸ்.எஸ்., வாயிலாக கட்சிக்குள் வந்தவர் இவர், 2017ல் பா.ஜ., ஆட்சியைப் பிடித்த போது, 'இவர்தான் முதல்வர் ஆவார்' என பேசப்பட்ட நிலையில், யோகி முதல்வரானார். அதிலிருந்து இருவருக்குமே பிரச்னை. இவரைத் தவிர, இன்னொரு துணை முதல்வரும் உள்ளார்; அவர் பிரிஜேஷ் பாடக்.
கடந்த 2024 பார்லிமென்ட் தேர்தலில், உ.பி.,யில் பா.ஜ., எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை; இதிலிருந்து, யோகி மீது கட்சிக்குள் உள்குத்து வேலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் இந்த இரண்டு துணை முதல்வர்களையும் தனித்தனியாக சந்தித்து, ஆலோசனை நடத்தி உள்ளார்.
பா.ஜ., வெற்றி பெற, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களும் தலைவர்களும் இதுவரை களப்பணியாற்றி வருகின்றனர்; ஆனால், இவர்கள் பெயர் வெளியே தெரியாது. தங்கள் இயக்கத்திற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் இந்த தொண்டர்கள் கடுமையாக வேலை செய்பவர்கள்.
உ.பி.,யில் பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக, இப்போதே தங்கள் வேலைகளைத் துவங்கிவிட்டது ஆர்.எஸ்.எஸ்., இதன் முதல் கட்டம் தான், துணை முதல்வர்களுடன் பாகவத் சந்திப்பு என்கின்றனர். 'எந்தவித கட்சி பூசலும் இல்லாமல், பா.ஜ., வெற்றி பெற வேண்டும்' என, பாகவத் அறிவுரை கூறியுள்ளதாக சொல்லப் படுகிறது.

