இன்று முதல் யு.பி.ஐ., புதிய விதிகள் அமல்! பரிவர்த்தனை செய்ய கட்டுப்பாடு
இன்று முதல் யு.பி.ஐ., புதிய விதிகள் அமல்! பரிவர்த்தனை செய்ய கட்டுப்பாடு
ADDED : பிப் 01, 2025 07:00 AM

புதுடில்லி; சிறப்பு எழுத்துகளால் உருவாக்கப்பட்ட யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் இன்று (பிப்.1) முதல் செயல்படாது.
நவீன கால உலகில், பணப்பரிவர்த்தனைகள் மிகவும் எளிதாக்கப்பட்டு விட்டன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் இருக்கும் சவுகரியமே அதற்கு காரணம் எனலாம்.
இந்நிலையில், இன்று (பிப்.1) முதல் சிறப்பு எழுத்துகளால் உருவாக்கப்பட்ட யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பரிவர்த்தனைகளில் நெறிமுறைகளை ஏற்படுத்தவே இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் (NPCI) தெரிவித்து இருக்கிறது.
அதாவது, பணப்பரிவர்த்தனையின் போது யு.பி.ஐ. ஐ.டி.யில் சிறப்பு எழுத்துகள் இருந்தால் அந்த பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். உதாரணமாக, @,#,%,& போன்ற சிறப்பு எழுத்துகள் இருந்தால் நிராகரிக்கப்படும்.
ஆகையால், யு.பி.ஐ., ஐ.டி.க்கள் ஆங்கில எழுத்துகளில் Aமுதல் Z வரையும், எண்களில் 0 முதல் 9 வரையும் இருப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு முன்னரே வெளியிடப்பட்டு விட்டாலும் சிறப்பு எழுத்துகள் இருந்தால் இன்று முதல் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது. தானாகவே அந்த செயல்பாடு ரத்தாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.