ஐரோப்பிய யூனியன் தலைவர் பயணித்த விமானத்திற்கு இடையூறு: ரஷ்யா மீது சந்தேகம்
ஐரோப்பிய யூனியன் தலைவர் பயணித்த விமானத்திற்கு இடையூறு: ரஷ்யா மீது சந்தேகம்
ADDED : செப் 01, 2025 09:45 PM

மாஸ்கோ: ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் பயணித்த விமானம் பல்கேரியாவில் பறந்து செல்கையில் ஜிபிஎஸ் சிக்னல் ' ஜாம்' செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில் ரஷ்யா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவை ஐரோப்பிய யூனியன் தலைவராக இருக்கும் உர்சுலா வான் டெர்லேயன் கடுமையாக விமர்சித்து வருகிறார். ஸ்காண்டினேவிய நாடுகள்( நார்வே, ஸ்வீடன், டென்மார்க்) மற்றும் பால்டிக் நாடுகள்( எஸ்டோனியா, லாத்வியா, லித்துவேனியா) தங்கள் பிராந்தியங்களில் ஜிபிஎஸ் சேவையை ரஷ்யா முடக்குவதாக குற்றம்சாட்டி வருகின்றன.
இச்சூழ்நிலையில், ரஷ்யா மற்றும் பெலாரஸ் எல்லையை ஒட்டியுள்ள ஐரோப்பிய நாடுகளுக்கு ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
பல்கேரியாவில் அவர் விமானத்தில் பயணித்து கொண்டு இருந்த போது ஜிபிஎஸ் ஜாம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அந்நாட்டின் புளோவ்டிவ் நகரில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் செய்தித் தொடர்பாளர் பொடேஸ்டா கூறியதாவது: ஜிபிஎஸ் ஜாம் செய்யப்பட்டதை எங்களால் உறுதிப்படுத்த முடியும். இதில் ரஷ்யாவன் தலையீடு இருக்கலாம் என சந்தேகம் உள்ளதாக பல்கேரியா தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது. ரஷ்யா மற்றும் அதன் பிரதிநிதிகளிடம் இருந்து வரும் அச்சுறுத்தல்களின் சவால்களை நேரடியாக லேயர் கண்டுள்ளார். ஐரோப்பிய யூனியன் பாதுகாப்புக்கு அதிகம் செலவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.