ADDED : ஜன 18, 2025 12:42 AM

பெங்களூரு: பெங்களூரில் புதிதாக அமெரிக்க துணை துாதரகத்தை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கான அமெரிக்க துாதர் எரிக் கார்செட்டி நேற்று திறந்து வைத்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரின், விட்டல் மல்லையா சாலையில் உள்ள ஜெ.டபிள்யு., மேரியாட் ஹோட்டலில் அமெரிக்க துணை துாதரகம் திறக்கப்பட்டுள்ளது.
இது, இந்தியாவின் ஐந்தாவது அமெரிக்க துாதரகமாகும். துாதரகத்துக்கு நிரந்தர கட்டடம் கட்டும் வரையில், தற்காலிகமாக இங்கு இயங்கும்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க துாதர் எரிக் கார்செட்டி நேற்று துணை துாதரகத்தை திறந்து வைத்தனர். துணை முதல்வர் சிவகுமார், தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா உடன் இருந்தனர்.
இதில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது:
பெங்களூரில் அமெரிக்க துணை துாதரகம் திறக்கப்பட்டுள்ளது ஒரு மைல் கல்லாகும். நகர மக்களின் நீண்டகால வேண்டுகோளை நிறைவேற்ற, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நகர மக்களுக்கு இது மிகவும் அனுகூலமாக இருக்கும்.
ஏற்கனவே, 12 நாடுகளின் துணை துாதரகங்கள் பெங்களூரில் உள்ளன. மேலும், பல நாடுகளின் துாதரகங்களை அமைக்கும் திட்டம் உள்ளது. இந்தியா - அமெரிக்கா உறவை பலப்படுத்த முயற்சி நடக்கிறது. பெங்களூரில் ஏராளமான வளங்கள் உள்ளன. இவற்றை பயன்படுத்த வேண்டும்.
பெங்களூரில் கடந்த ஓராண்டில், 8.80 லட்சம் பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.