'அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர் சமூக வலைதள கணக்குகளை மறைக்க கூடாது'
'அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர் சமூக வலைதள கணக்குகளை மறைக்க கூடாது'
ADDED : டிச 05, 2025 01:23 AM

நியூயார்க்: 'அமெரிக்காவில் பணிபுரிவதற்காக வழங்கப்படும், எச்.1பி., விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி தங்களின் சமூக வலைதள கணக்குகள் அனைத்தையும் மறைத்த நிலையில் வைக்கக் கூடாது, ஆய்வு செய்ய வசதியாக அவற்றை, 'பப்ளிக்' எனப்படும் பொது கணக்காக மாற்ற வேண்டும்' என, அதிபர் டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளை சேர்ந்த திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்கு, எச்.1பி., விசா வழங்கப்படுகிறது.
'இந்த விசா திட்டத்தில் நிறுவனங்கள் திறமையானவர்களை மட்டும் எடுப்பதில்லை, குறைந்த ஊதியத்தில் பணிபுரிய தயாராக உள்ளவர்களையும் எடுக்கிறது.
இதனால், அமெரிக்கர்களின் வேலை, வெளிநாட்டவர்களால் பறிக்கப்படுகிறது எனக்கூறி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், விசா நடைமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார்.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் விசா தொடர்பாக நேற்று முன்தினம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டது.
அதன் விபரம்:
எச்.1பி., விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்கள் அழைத்துச் செல்லும் கணவன் அல்லது மனைவி மற்றும் குழந்தைகளுக்கான 'எச்4' விசா விண்ணப்பதாரர்கள் அனைவரும் தங்கள் சமூக வலைதள கணக்குகளை மறைத்து வைக்கக் கூடாது.
தனியுரிமை அமைப்பில் சென்று அவற்றை பொது கணக்காக மாற்ற வேண்டும். அதில் உள்ள பதிவுகள் அனைத்தும் டிசம்பர் 15 முதல் ஆய்வு செய்யப்படும். அமெரிக்க விசா என்பது உரிமை இல்லை. அது ஒரு சலுகை.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் விசா விண்ணப்பதாரர்களை அடையாளம் காண, ஆய்வில் கிடைக்கும் அனைத்து தகவல்களையும் பயன்படுத்துவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா ஆண்டுதோறும் மொத்தம், 85,000 எச்.1பி., விசாக்களை ஒதுக்கீடு செய்கிறது. இதில், 75 சதவீதத்தை இந்தியர்கள் பெறுகின்றனர். முன்னர், மாணவர் விசா மற்றும் பரிமாற்ற திட்டத்துக்கான விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைதள கணக்குகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. தற்போது அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

