கும்பமேளா ஏற்பாடு சரியில்லை; உத்தரகண்ட் மடாதிபதி கோபம்
கும்பமேளா ஏற்பாடு சரியில்லை; உத்தரகண்ட் மடாதிபதி கோபம்
ADDED : பிப் 20, 2025 02:21 AM

புதுடில்லி: கும்பமேளா ஏற்பாடுகள் தொடர்பாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்த நிலையில், உத்தரகண்ட் மடாதிபதியும், முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என, விமர்சித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம், 13ம் தேதி துவங்கிய மஹா கும்பமேளா, வரும், 26ம் தேதி வரை நடக்கிறது. இதுவரை, 55 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடியுள்ளனர்.
மஹா கும்ப மேளாவில், சமீபத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, இதை கடுமையாக விமர்சித்திருந்தார். 'இது மஹா கும்பமேளா அல்ல; மரண கும்பமேளா' என, அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
உத்தரகண்டில் அமைந்துள்ள ஜோதிஷ் பீடத்தின் 46வது சங்கராச்சாரியாரான ஸ்வாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி அளித்த பேட்டி:
கும்பமேளா இந்த நாட்களில் நடக்கப் போகிறது என்பது, 12 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். ஆனாலும் முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை. 300 கி.மீ., துாரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மக்கள், 30 கி.மீ., துாரம் வரை தங்களுடைய பொருட்களுடன் நடந்து செல்ல நேர்கிறது.
புனித நீராடும் நதியில், கழிவுநீர் கலக்கப்பட்டுள்ளது. அதில் தான், கோடிக்கணக்கான மக்களை நீராட வைத்துள்ளனர். இவையெல்லாம் முறையான ஏற்பாடுகளா? 12 ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்திருந்தும் ஏன் சரியான, முறையான ஏற்பாடுகளை செய்யவில்லை?
இந்த நிகழ்வு, 144 ஆண்டுக்கு ஒரு முறை நடப்பதாக ஒரு பொய்யையும் பரப்பியுள்ளனர். கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்தபோதும், அதை மறைக்க முயன்றனர். இது மிகப்பெரும் குற்றம்.
இவ்வாறு அவர் கூறினார்.

