ADDED : பிப் 11, 2024 02:24 AM

ஹல்த்வானி உத்தரகண்டில், வன்முறையால் பாதிக்கப்பட்ட ஹல்த்வானி பகுதியில் உள்ள பன்புல்புராவில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அதை சுற்றியுள்ள பகுதிகளில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன.
தாக்குதல்
உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானி நகரில் உள்ள பன்புல்புராவில், அரசு நிலத்தை ஆக்கிரமித்து, 'மதரசா' எனப்படும் இஸ்லாமிய மதக் கல்வி குறித்து கற்றுத் தரப்படும் கட்டடம் கட்டப்பட்டிருந்தது.
இந்த கட்டடத்தை, சமீபத்தில், போலீசார் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
மேலும், பன்புல்புரா போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய போராட்டக்காரர்கள், வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு எரித்தனர்.
இந்த கலவரத்தில், ஆறு பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்.
இதையடுத்து, ஹல்த்வானி நகரில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன.
5 பேர் கைது
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஏ.டி.ஜி.பி., அன்ஷுமான் நேற்று கூறியதாவது:
கலவரம் தொடர்பாக, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுஉள்ளன. இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சமூக வலைதளங்களில் வதந்தி பரவுவதை தடுக்க இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
பன்புல்புரா பகுதியில் மட்டும் தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.
மற்ற இடங்களில் கட்டுப்பாடுகள் திரும்பப் பெறப்பட்டு இயல்புநிலை திரும்பி உள்ளது. எனினும், பள்ளிகள் திறக்கப்படவில்லை.
பன்புல்புரா உள்ளிட்ட பகுதிகளில், தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. போலீசாரும் அவ்வப்போது ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், கலவரத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து, கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

