உ.பி.,க்கு வந்தா சட்னி; ஹிமாச்சலுக்கு வந்தா ரத்தமா; கடை பெயர் பலகை வைக்க காங்., அரசு உத்தரவு
உ.பி.,க்கு வந்தா சட்னி; ஹிமாச்சலுக்கு வந்தா ரத்தமா; கடை பெயர் பலகை வைக்க காங்., அரசு உத்தரவு
ADDED : செப் 25, 2024 10:29 PM

சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களின் பெயர் பலகைகளில் உரிமையாளர் மற்றும் ஊழியரின் பெயர் இடம்பெற வேண்டியது கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் கன்வர் யாத்திரை நடப்பது வழக்கம். கடந்த ஜூலை 6 முதல் ஆக., 6 வரை இந்த யாத்திரை நடந்தது. இந்த யாத்திரை நடக்கும் வழிகளில் உள்ள உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர் அடங்கிய பலகையை வாடிக்கையாளர் கண்ணில்படும்படி மாட்டி வைக்க உத்தரபிரேதசம், உத்தரகண்ட் மற்றும் ம.பி., மாநில அரசுகள் உத்தரவிட்டன.
இது அப்போது பலத்த சர்ச்சையை எழுப்பியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இதை கடுமையாக குறை கூறின.
இந்நிலையில், இதேபோன்ற உத்தரவை காங்கிரஸ் ஆளும் ஹிமாச்சல பிரதேச அரசும் பிறப்பித்து உள்ளது. அம்மாநிலத்தில் உள்ள உணவகங்கள் மற்றும் ரெஸ்டாரண்ட்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பெயர் அடங்கிய பலகையை வைக்கும்படி உத்தரவிடப்பட்டு உள்ளது. வரும் ஜனவரி மாதம் முதல் அமல்படுத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் விக்கிரமாதித்யா சிங் கூறியதாவது: உ.பி.,யை போல் இந்த உத்தரவை கடுமையாக அமல்படுத்த போகிறோம். நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் உள்ளாட்சி துறை இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளன. உணவு குறித்த மக்களின் அச்சத்தை போக்க இந்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.