மழைதான் விட்டிருக்கு... தூவானம் விடவில்லை: வி.சி.க.,வின் 'அதிகார' போஸ்டர்!
மழைதான் விட்டிருக்கு... தூவானம் விடவில்லை: வி.சி.க.,வின் 'அதிகார' போஸ்டர்!
ADDED : செப் 18, 2024 08:49 AM

கோவை: ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோவை நகரெங்கும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பதிவு
அமெரிக்காவில் இருந்து சென்னையில் முதல்வர் ஸ்டாலின் கால் வைத்த தருணத்தில், கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் எக்ஸ் தளபதிவு அரசியல் களத்தை தடதடக்க வைத்தது. ஆட்சியிலும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று அவர் பேசிய பேச்சு அந்த பதிவில் இருந்தது தான் காரணம்.
அழைப்பு
கூட்டணியில் இருந்துகொண்டே ஆட்சியில் பங்கு கேட்கிறார், மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அ.தி.மு.க.,வுக்கு அழைப்பு விடுக்கிறார், கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரோ என்று பேச்சுகள் எழுந்தன. தி.மு.க., கூட்டணியில் வெடித்த இந்த சர்ச்சை ஸ்டாலினின் அமெரிக்க பயணம் பற்றிய முக்கியத்துவத்தை பின்னோக்கி கொண்டு சென்றது.
அதிகாரம்
தமிழக ஊடகங்களில் மட்டும் அல்லாது, தேசிய அளவில் இந்த ஆட்சி, அதிகாரம் பங்கு விவகாரம் பற்றிக்கொண்டது. தி.மு.க.,வுக்கு பெரும் நெருக்கடியாக மாறவே, நேராக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார் திருமாவளவன். பின்னர், 'அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து எல்லாம் நாங்கள் பேசவில்லை, 1999ம் ஆண்டு முதல் அந்த கருத்தை நாங்கள் பேசி வருகிறோம், அதை இப்போதும் பேசுவோம், பேச வேண்டிய நேரத்தில் வலுவாக பேசுவோம்' என்று விளக்கம் அளித்தார்.
இனி இல்லை
இதையடுத்து, 'ஆட்சி, அதிகாரம் பங்கு விவகாரம் ஒரு சந்திப்பில் அதலபாதாளத்தில் போய்விட்டது, இனி இதுபற்றிய பேச்சுகள் எழாது' என்று அனைவரும் எண்ணினர். ஆனால், 'அனைத்தும் பொய்யா கோப்பால்' என்று யோசிக்க வைக்கும் வகையில் ஒரு போஸ்டர் கோவையில் முளைத்து, தெருச்சுவர்களில் பளிச்சிட ஆரம்பித்துள்ளது.
போஸ்டர்
அந்த போஸ்டரில் அதே ஆட்சி, அதிகாரத்தில் பங்கு, 2026ம் ஆண்டு வேண்டும் என்று வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. போஸ்டர் விடுதலை சிறுத்தைகளின் தொண்டரணி சார்பில் ஒட்டப்பட்டு உள்ளது. ஒருபுறம் திருமாவளவன் படமும், மற்றொரு புறம் மாவட்ட நிர்வாகிகளின் படங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.
ஓயவில்லை
கோவையின் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டு உள்ள இந்த போஸ்டர்களை பார்க்கும் தி.மு.க.வினர் உச்சப்பட்ச கோபத்தில் உள்ளனர். 'அனைத்து பிரச்னைகளும் அப்பாடா முடிந்து விட்டது என்று நினைத்த தருணத்தில் இப்படி ஒரு போஸ்டரா' என்று அவர்கள் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர்.
உணர்வு
அதேநேரத்தில் இந்த விவகாரத்தை வேறுகோணங்களில் உற்று நோக்க வேண்டி இருப்பதாக கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு: தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் இடையே இன்னமும் இணக்கம் வர வில்லையோ என்பதை இது உணர்த்துகிறது. தலைமையிடத்தில் விவகாரம் முடிந்துவிட்டது, ஆனால் அடிமட்டத்தில் இருக்கும் உணர்வுபூர்வமான விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் மத்தியில் ஆட்சி, அதிகார பங்கு என்ற வேட்கை அப்படியே உள்ளதை தான் இந்த போஸ்டர் காட்டுகிறது.
மறைமுக உத்தரவு
'தலைமை அப்படித்தான் சொல்லும், கீழ்மட்ட நிர்வாகிகள் இப்படி தொடர்ந்து பேசலாம் என்று மறைமுக உத்தரவு விடப்பட்டிருக்கலாம்' என்று கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.
தூவானம்
எது எப்படியோ, தி.முக., வி.சி., இடையே பிணக்கு இல்லை, கூட்டணி கணக்கு தான் இருக்குகிறது என்பது அனைவர் தரப்பிலும் நம்பப்பட்டது. ஆனால், அப்படி இல்லை... மழைதான் விட்டிருக்கிறது, தூவானம் விடவில்லை என்பதை தான் இந்த போஸ்டர் சொல்கிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.