வெள்ளியங்கிரி மலையேற 5099 ரூபாய் செலுத்தணுமா? தமிழக பா.ஜ., கண்டனம்
வெள்ளியங்கிரி மலையேற 5099 ரூபாய் செலுத்தணுமா? தமிழக பா.ஜ., கண்டனம்
ADDED : அக் 26, 2024 05:54 PM

சென்னை: வெள்ளியங்கிரி மலை மீது ஏறுபவர்களுக்கு ரூ.5,099 கட்டணம் விதித்திருப்பது, சனாதன ஒழிப்பின் ஒரு அங்கமா என்று துணை முதல்வர் உதயநிதிக்கு பா.ஜ., கேள்வி எழுப்பியுள்ளது.
இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக வனத்துறை சார்பில் மலையேற்றத் திட்டத்தை துணை முதல்வர் உதயநிதி தொடங்கி வைத்தார். இதன்மூலம், நீலகிரி, கோவை, திருப்பூர், நெல்லை, தேனி உள்பட 14 மாவட்டங்களில் 40 தேர்வு செய்யப்பட்ட மலையேற்றப் பாதைகள் திறக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மலையேற்றத்திற்கும் குறிப்பிட்ட தொகை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு ரூ.5,099 பிளஸ் ஜி.எஸ்.டி., கட்டணமாக தமிழக அரசு விதித்துள்ளது.
தமிழக அரசின் இந்தத் திட்டத்திற்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக, தென்கைலாயமான வெள்ளியங்கிரி மலையில் உள்ள சிவபெருமானை வழிபடுவதற்கு, அரசுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமா? என்று பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வதாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: துணை முதல்வர் உதயநிதி வெளியிட்டு இருக்கிற ஒரு அறிவிப்பில் தென்கைலாயமான வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் ரூ. 5,099 தமிழக அரசுக்கு கட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. 'மலையேற்றத்திட்டம்' என்ற பெயரில் இந்த அநியாயத்தை திராவிட மாடல் அரசு செய்துள்ளது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று சிவபெருமானை வணங்கி வருகின்றனர். வெள்ளியங்கிரி மலைக்கு வருகிறவர்கள் ஆன்மிக பக்தர்களே தவிர மலையேற்றத்திற்கு வருகிற சுற்றுலா பயணிகள் அல்ல. வெள்ளியங்கிரி மலைக்கு சிவராத்திரி தினத்தில் மட்டும் 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். சித்ரா பவுர்ணமி தினத்தன்று சுமார் பத்து லட்சம் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர்.
சித்ரா பவுர்ணமி அன்று மலை அடிவாரத்தில் சுற்றி இருக்கிற கிராமத்து மக்கள் வில்லு வண்டியில் வந்து வள்ளி கும்மி, காவடி, ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காவடி ஏந்தி கொண்டு, வெள்ளியங்கிரி மலையில் ஏறுவார்கள். இனிவரும் காலங்களில் அந்த சுற்றுவட்டார கிராமத்து மக்கள் காவடியுடன் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவதற்கு உதயநிதிக்கு 5 ரூபாய் தண்டம் கட்ட வேண்டுமா? தாணிகண்டி, முள்ளாங்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள பல கிராம மக்கள், வெள்ளியங்கிரியின் மீது அமர்ந்திருக்கிற சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். இனிவரும் காலங்களில் அந்த கிராமங்களைச் சார்ந்த மக்கள் தன்னுடைய குலதெய்வத்தை கும்பிடுவதற்கு திராவிட மாடல் அரசுக்கு கப்பம் கட்ட வேண்டுமா?
வெள்ளியங்கிரி வரும் பக்தர்களை தடுப்பதற்கு உதயநிதி திட்டம் தீட்டுகிறாரா என்ற கேள்வி எழுகிறது. சனாதன ஹிந்து தர்மத்தை அழிப்பேன் என்று உதயநிதி தொடர்ந்து கூறி வருகிறார். அனைவரும் அறிந்ததே. இது உதயநிதி முன்னெடுத்துள்ள சனாதன ஹிந்து தர்ம ஒழிப்பு சதி திட்டத்தின் ஒரு அங்கமா என்பதை உதயநிதி தெளிவுபடுத்த வேண்டும்.
தென் கைலாயமான வெள்ளியங்கிரியில் அவ்வையார் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வெள்ளை விநாயகர் கோவில், சீதை வனம், பீமன் களி உருண்டை, சித்தர் கூரை உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக மையங்கள் உள்ளன. வெள்ளியங்கிரி மலையின் ஆறாவது மலையான திருநீர் மலையில் உள்ள ஆண்டி சுனையில் இருந்து புனித நீரை எடுத்து வந்து கும்பாபிஷேகம் பண்ண முடியாத நிலையில் இருக்கிற திருக்கோவில்களில் அபிஷேகம் செய்தால் அந்த கோவிலில் உடனடியாக அபிஷேகம் நடக்கும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.
கடந்த வாரம் கூட திருவண்ணாமலையில் உதயநிதி, ஆய்வு என்கிற பெயரில் மலையை சுற்றி வந்தார். வேண்டுதலுக்காக கிரிவலம் வந்திருப்பார் என்று மக்கள் பலரும் நினைத்த நிலையில், இப்பொழுது, திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கும் கூட கட்டணம் வசூலிக்கலாம் என்ற மோசமான யோசனையில் உதயநிதி அங்கு வந்து இருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.
ஒரு மிகப்பெரிய ஆன்மிக ஆதார ஸ்தலமான வெள்ளியங்கிரி மலையின் வழிபாட்டை வெளிப்படையாகவே குலைக்கும் நோக்கத்தோடு, இந்த அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி அறிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த அறிவிப்பை ரத்துசெய்யவில்லை என்று சொன்னால், பா.ஜ., மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும், எனக் குறிப்பிட்டுள்ளார்.