கோவில்களை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க நாடு தழுவிய போராட்டம் வி.எச்.பி., தயார்
கோவில்களை அரசின் பிடியிலிருந்து விடுவிக்க நாடு தழுவிய போராட்டம் வி.எச்.பி., தயார்
ADDED : செப் 25, 2024 01:59 AM

புதுடில்லி, 'சிறுபான்மையினருக்கான வழிபாட்டு தலங்களை அவர்களே நிர்வகிக்கும் போது, கோவில்கள் மட்டும் ஏன் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்' என, விஸ்வ ஹிந்து பரிஷத் கேள்வி எழுப்பி உள்ளது.
ஆந்திராவில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹிந்து கோவில்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்ற குரல் ஒலிக்கத் துவங்கியுள்ளது.
இந்நிலையில், விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணை பொதுச்செயலர் சுரேந்திர ஜெயின், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நாடு முழுதும் உள்ள கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து, ஹிந்துக்கள் வசம் ஒப்படைக்கும் பணியை இன்று முதல் துவக்க உறுதி ஏற்றுள்ளோம்.
முதற்கட்டமாக, அனைத்து மாநிலங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டு, அந்தந்த மாநில முதல்வர்கள் வாயிலாக எங்கள் கோரிக்கையை கவர்னர்களிடம் சமர்ப்பிப்போம்.
தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடுவோம். ஹிந்து கோவில்களை ஹிந்து சமுதாயத்தினரிடம் ஒப்படைக்கும் கோரிக்கை ஒரு இயக்கமாக முன்னெடுக்கப்படும்.
கோவில்களை நிர்வகிப்பது அரசின் வேலை அல்ல என்பதை நீதிமன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
பிரசாதத்தில் கலப்படம் என்பது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மட்டும் நடக்கும் விவகாரம் அல்ல. பல கோவில்களில் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சபரிமலை அய்யப்பன் கோவில் பாயாசத்தில் கூட கலப்படம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பல நிதி முறைகேடுகள் நடக்கின்றன. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கோவிலில் கொள்ளையடித்து ஹிந்துக்களின் உணர்வுகளுடன் விளையாடுகின்றனர்.
சிறுபான்மையினர் தங்கள் வழிபாட்டு தலங்களை அவர்களே நிர்வகிக்கும்போது, கோவில்கள் மட்டும் ஏன் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
முறைகேடுகள் நடக்கும்போது விசாரணை நடத்துவது நிரந்தர தீர்வாகாது. கோவில்களை அரசின் பிடியில் இருந்து விடுவிப்பதே நிரந்தர தீர்வு.
இவ்வாறு அவர் கூறினார்.