வீடியோ பதிவை நீக்குங்கள்: கெஜ்ரிவால் மனைவிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வீடியோ பதிவை நீக்குங்கள்: கெஜ்ரிவால் மனைவிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
UPDATED : ஜூன் 15, 2024 02:47 PM
ADDED : ஜூன் 15, 2024 11:52 AM

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை, உடனடியாக நீக்க வேண்டும் என அவரது மனைவி சுனிதாவுக்கு டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
டில்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் கைதாகி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இது தொடர்பாக வைபவ் சிங் என்ற வழக்கறிஞர் டில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது: கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, மார்ச் 28ல் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்பாக பேசினார். இது வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. நீதிமன்ற விதிகளுக்கு எதிரான செயல் இது எனக் கூறியிருந்தார். இந்த வீடியோவை சுனிதா மற்றும் சிலர் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நீனா பன்சால் கிருஷ்ணா மற்றும் அமித் ஷர்மா அடங்கிய அமர்வு, '' சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை உடனடியாக நீக்குவதுடன், அது தொடர்பாக நீதிமன்றத்தில் சுனிதா விளக்கம் அளிக்க வேண்டும். வேறு யாரேனும் அந்த வீடியோவை மறுபதிவேற்றம் செய்தால், சமூக வலைதள நிறுவனங்கள் அதனை உடனடியாக நீக்க வேண்டும்'' என உத்தரவிட்டது. மனு மீதான விசாரணையை ஜூலை 9 ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.