டில்லியில் சி.பி.ஐ., அலுவலகத்தில் விஜய்க்கு வரவேற்பு!
டில்லியில் சி.பி.ஐ., அலுவலகத்தில் விஜய்க்கு வரவேற்பு!
ADDED : ஜன 25, 2026 12:56 AM

புதுடில்லி: த.வெ.க., தலைவரும் நடிகருமான விஜய், கரூர் சம்பவம் தொடர்பாக சமீபத்தில் டில்லி வந்து, சி.பி.ஐ., அலுவலகத்தில் இரண்டாவது முறையாக விசாரணைக்கு ஆஜரானார். கடந்த முறையை விட, இந்த தடவை சி.பி.ஐ., அலுவலகத்தில் விஜய்க்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூடிவிட்டனராம். சி.பி.ஐ., அலுவலகத்திற்கு வெளியே ஒரு கூட்டம்; அதே போல உள்ளேயும் கூட்டம்.
இந்த ரசிகர்கள் வேறு யாருமல்ல. சி.பி.ஐ., அதிகாரிகள் மற்றும் அங்கு பணிபுரிவோரின் மனைவியர், குழந்தைகள் என பெரிய கூட்டம் வரவேற்பறையில் கூடியிருந்ததாம்.
வரவேற்பறையில் விஜய் நுழையும் போதே, காவலுக்கு இருந்த கான்ஸ்டபிள்கள் வரவேற்று, 'நமஸ்தே' என கூறினராம்.
சில சி.பி.ஐ., அதிகாரிகள் மற்றும் போலீசார், விஜயுடன் 'செல்பி' எடுத்துக் கொண்டனராம். இன்னொரு பக்கம் அதிகாரிகளின் மனைவியர் சிலர், 'விஜய்... விஜய்...' என கத்திவிட்டனராம். ஓரிருவர் கட்டிப்பிடிக்காத குறையாக, கை குலுக்கினராம்.
சில அதிகாரிகளின் குழந்தைகளும், 'விஜய்... விஜய்...' என கூச்சலிட்டனராம். அவர்களும் போட்டோ, செல்பி எடுத்துக்கொள்ள ஆசைப்பட, பொறுமையாக அவர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றினாராம் விஜய். அதே சமயம் ஏகப்பட்ட பாதுகாப்பும் விஜய்க்கு கொடுக்கப் பட்டது.
'விசாரணையின் போது, அமைதியாக நன்றாக நடந்து கொண்டார் விஜய்' என்கின்றனர் சி.பி.ஐ., அதிகாரிகள்.

