இது அது இல்லையா! பீதியில் ஓநாய் என்று நினைத்து நாயை தாக்கிய கிராம மக்கள்
இது அது இல்லையா! பீதியில் ஓநாய் என்று நினைத்து நாயை தாக்கிய கிராம மக்கள்
ADDED : செப் 07, 2024 11:15 AM

லக்னோ: உ.பி.,யில் ஓநாய் என்று நினைத்து ஊர் மக்கள் நாயை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓநாய் வேட்டை
உ.பி.யில் மக்களை பாடாய்படுத்தும் ஓநாய் கும்பலால் ஏற்பட்ட பயமும், பீதியும் இன்னமும் குறையவில்லை. மனித வேட்டையாடும் ஓநாய்களை பிடிக்க ஆபரேஷன் பேடியா என்ற பெயரில் வனத்துறையினர் தீவிரமாக களம் இறங்கி உள்ளனர். இதுவரை 4 ஓநாய்கள் பிடிபட்டு உள்ள நிலையில் மக்கள் பீதியில் இருக்கின்றனர்.
தீவிர ஆய்வு
மஜ்ரா லோதன்புர்வா கிராமத்தில் விலங்கு ஒன்று சங்கம்லால் என்ற நபரை தாக்கியதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்ற அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். தாக்கியது ஓநாய் தான் என்று ஊர் மக்கள் வனத்துறையினரிடம் கூற, அவர்கள் அதை நம்பவில்லை.
அடித்துக் கொன்றனர்
இந்நிலையில், அதே கிராமத்தில் இருந்து கிரிபராம் (65)என்ற முதியவரையும், அவரது 4 வயது பேரன் சத்யன் என்பவரையும் விலங்கு ஒன்று கடித்துள்ளது. ஆத்திரம் அடைந்த ஊர் மக்கள் அந்த விலங்கை ஆத்திரம் தீர அடித்துக் கொன்று இருக்கின்றனர்.
சாதாரண நாய்
உடனடியாக இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள், ஊர் மக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கிராம மக்கள் அடித்துக் கொன்றது மனித வேட்டையாடும் ஓநாய் அல்ல, சாதாரண நாய் என்பதை தெரிந்துகொண்டனர்.
கண்காணிப்பு
நாயை, ஓநாய் என்று தவறுதலாக நினைத்து பீதியில் ஊர்மக்கள் அடித்துக் கொன்று உள்ளனர் என்பதையும் உணர்ந்து கொண்டனர். அவர்களிடம் விசாரணை நடத்திய வனத்துறையினர் சிறிதுநேர கண்காணிப்புக்கு பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.