கோவில், அரசு நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
கோவில், அரசு நிலம் ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்
ADDED : பிப் 04, 2025 06:37 AM

தங்கவயல்: ராயசந்திரா கிராமத்தில் கோவில், அரசு நிலங்களை ஆக்கிரமித்தவர்களை கண்டித்தும் நிலங்களை மீட்கக் கோரியும் கிராம மக்கள் நேற்று தர்ணா செய்தனர்.
தங்கவயல் தொகுதியின் கேசம்பள்ளி கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராயசந்திராவில் அரசின் தரிசு நிலம், கோவில் நிலங்களை சட்டவிரோதமாக சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதை கண்டித்தும், சம்பந்தப்பட்ட நிலங்களை மீட்கக் கோரியும் தாலுகா நிர்வாக அலுவலகத்தின் முன் நேற்று கிராம மக்கள் தர்ணா நடத்தினர். போராட்டத்திற்கு தலைமை வகித்த கிராம பிரமுகர் அனுமப்பா பேசியதாவது:
ராயசந்திரா கிராமத்தில் அரசு நிலத்தை சட்டவிரோதமாக ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். அவருக்கு ஆதரவாக தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, டி.சி.சி., வங்கி முன்னாள் தலைவர் கோவிந்த கவுடா ஆகியோர் செயல்படுகின்றனர்.
சட்டவிரோதமாக அரசு மற்றும் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய அவர்கள் உதவுகின்றனர். சம்பந்தப்பட்ட நிலத்தில் முனீஸ்வரர், அன்னம்மா கோவில்கள் உள்ளன. எனவே, அரசு நிலத்தையும், கோவில் நிலத்தையும் அரசு காப்பாற்ற வேண்டும். முறைகேடுகளுக்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். போராட்டத்தில் பெண்களும் பங்கேற்றனர். தாசில்தார் நாகவேணியிடம் அவர்கள் மனு அளித்தனர்.

