நாக்பூரில் வன்முறை: அனைவரும் அமைதி காக்க அரசு வேண்டுகோள்
நாக்பூரில் வன்முறை: அனைவரும் அமைதி காக்க அரசு வேண்டுகோள்
UPDATED : மார் 17, 2025 11:25 PM
ADDED : மார் 17, 2025 11:12 PM

நாக்பூர்: நாக்பூரில் பரவிய வதந்தியால் வன்முறை வெடித்தது. வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்கும்படி மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், இன்று(மார்ச் 17) மாலை ஒரு பிரிவினர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் அறிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. மாலை நேரத்தில், ஒரு பிரிவினர் மத நிந்தனை செய்து விட்டதாக வதந்திகள் பரவின. இதைத்தொடர்ந்து வன்முறை வெடித்தது. ஒரு பிரிவினர் வாகனங்களை தீவைத்து எரிக்க தொடங்கினர். இதனால் நகரம் முழுவதும் பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது.
மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், பொதுமக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். நாக்பூர் தொகுதி எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, 'வன்முறை சம்பவங்களுக்கு வதந்தி பரவியதே காரணம்' என்று தெரிவித்துள்ளார்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க, போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.