ADDED : நவ 13, 2024 03:41 AM

புதுடில்லி : 'டாடா' குழுமமும், 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்' நிறுவனமும் இணைந்து, விஸ்தாரா பயணியர் விமான சேவை நிறுவனத்தை, கடந்த 10 ஆண்டுகளாக இயக்கி வந்தன.
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்திய பின், 'ஏஐஎக்ஸ் கனெக்ட்' பயணியர் விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உடன், கடந்த மாதம் 1ம் தேதி இணைத்துக் கொண்டது.
விஸ்தாரா நிறுவனம், ஏர் இந்தியாவுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. விஸ்தாராவின் கடைசி சர்வதேச விமான சேவையான யு.கே., - 115, டில்லியில் இருந்து சிங்கப்பூர் நோக்கி நேற்று அதிகாலை புறப்பட்டது.
அப்போது விஸ்தாரா நிறுவனத்தின் ஊழியர்கள், களப் பணியாளர்கள், அந்த விமானத்துக்கு பிரியாவிடை அளித்தனர். இதேபோல், உள்நாட்டு கடைசி விமான சேவையான யு.கே., - 986, மும்பையில் இருந்து டில்லிக்கு நேற்று அதிகாலை புறப்பட்டது.
விஸ்தாரா - ஏர் இந்தியா இணைப்புக்கு பிறகான முதல் சர்வதேச விமான சேவையான ஏ.ஐ., - 2286, மேற்காசிய நாடான கத்தாரின் தோஹா நகரில் இருந்து, மும்பை நோக்கி நேற்று காலை புறப்பட்டது. உள்நாட்டு விமான சேவையான ஏ.ஐ., -- 2984, மும்பையில் இருந்து டில்லிக்கு நேற்று இயக்கப்பட்டது.