ADDED : மே 11, 2025 01:37 AM
புதுடில்லி:பல கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டவர், ரிங் ரோட்டில் கைது செய்யப்பட்டார்.
புதுடில்லி அவுட்டர் ரிங் ரோட்டில் 2024ம் ஆண்டு அக்.,1ம் தேதி ஒருவரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 4.65 லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக வஜிராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து, யூசுப்,27, என்பவரை தேடி வந்தனர். இந்த வழக்கில், யூசுப் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார்.
அதேபோல, வடக்கு டில்லி திமர்பூரில் பிப்.,14ம் தேதி, துப்பாக்கி முனையில் ஒருவரிடம் 3,000 ரூபாய் கொள்ளையடித்த வழக்கிலும் யூசுப் தேடப்பட்டார்.
காஜியாபாத், ஹாபூர் மற்றும் நொய்டா ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களிலும் யூசுப் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சில மாதங்களுக்கு முன், ஹாபூர் போலீசார் யூசுபை சுற்றி வளைத்தனர். போலீசார் காலில் துப்பாக்கியால் சுட்டும், யூசுப் தப்பினார்.
இந்நிலையில், உத்தர பிரதேச கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் யூசுபை, டில்லி போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.