ADDED : ஏப் 05, 2026 02:41 AM
புதுடில்லி: குற்றவழக்குகளில் தேடப்பட்ட ரவுடி, கடும் துப்பாக்கிச் சண்டைக்குப் பின் கைது செய்யப்பட்டார். கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டன.
தென்கிழக்கு டில்லியின் பதர்பூரை சேர்ந்தவர் முஹமது சலீம் என்ற கஞ்சா, 48. தாதா பஹல்வான் கும்பலைச் சேர்ந்த சலீம் மீது, 75 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
குற்றப் பிரிவு போலீசார், சலீமை தீவிரமாக தேடி வந்த நிலையில், பதர்பூரில் அவரது நடமாட்டம் குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது.
குற்றப்பிரிவு போலீசார் பதர்பூரில் நேற்று முன் தினம் நள்ளிரவு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். முஹமது சலீம் ஸ்கூட்டரில் வந்தபோது, நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர்.
ஆனால், வண்டியை நிறுத்தாமல் அதிவேகமாக சென்றார். போலீசார் விரட்டிச் சென்றனர். திடீரென ஸ்கூட்டர் சாலையில் கவிழ்ந்தது.
உடனே, கைத்துப்பாக்கியால் போலீசை நோக்கி சலீம் சரமாரியாக சுடத் துவங்கினார். போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.
சலீம் இடது காலில் குண்டு பாய்ந்தது. போலீசார் சுற்றிவளைத்து சலீமை கைது செய்தனர். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
காலில் பாய்ந்துள்ள துப்பாக்கிக் குண்டை அகற்ற, சப்தர்ஜங் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
வடகிழக்கு டில்லியில் சலீம் பஹல்வான் கொலை வழக்கில் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த முஹமது சலீம் டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் கொலை, கொள்ளை மற்றும் திருட்டு ஆகிய குற்றச் செயல்களை செய்து வந்தார். விசாரணை நடக்கிறது.
