வக்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைப்பு
வக்பு சட்டத்திருத்த மசோதா: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைப்பு
UPDATED : ஆக 08, 2024 05:52 PM
ADDED : ஆக 08, 2024 01:16 PM

புதுடில்லி: வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை லோக்சபாவில், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் மசோதா, பார்லி., கூட்டுக்குழு அனுப்பப்பட்டது.
முஸ்லிம்கள், மதம் மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துவதற்காக, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நன்கொடையாக அளிக்கின்றனர். இவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகளை கண்காணிக்க, நிர்வகிக்க, மாநிலங்களில் வக்பு வாரியங்களும், தேசிய அளவில் வக்பு கவுன்சிலும் உள்ளன.
இதைத் தவிர, வக்பு தீர்ப்பாயமும் உள்ளது. வக்பு வாரிய சட்டம், 1995ன்படி வக்பு சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பாக பல விதிகள் உருவாக்கப்பட்டன. காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2013ல், இதில் பல விதிகள் தளர்த்தப்பட்டு, தாராளமயமாக்கப்பட்டது.
தற்போது நாடு முழுதும், 9.4 லட்சம் ஏக்கர் பரப்புள்ள, 8.7 லட்சம் சொத்துக்கள் வக்பு வாரியங்களிடம் உள்ளன. வக்பு சொத்துக்கள் நிர்வாகத்தில் பல முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், வக்பு வாரியச் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், மத்திய அரசு புதிய மசோதாவை லோக்சபாவில் மத்திய சிறுபான்மையினர் துறை அமைச்சர் கிரண் ரஜிஜூ தாக்கல் செய்தார். இதன் மீதான விவாதம் நடந்தது. காங்கிரஸ்,சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
நிறுத்துங்கள்
மசோதாவை ஆதரித்து கிரண் ரிஜிஜூ பேசியதாவது: இந்த மசோதா மூலம் எந்த மத அமைப்பின் சுதந்திரத்திலும் தலையிட முடியாது. யாருடைய உரிமையையும் இது பறிக்காது. உரிமைகளைப் பெறாதவர்களுக்கு உரிமைகளை வழங்குவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சச்சார் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் இந்த மசோதா கொண்டு வரப்படுகிறது. இந்த மசோதாவை எதிர்ப்பதை நிறுத்துங்கள். யார் எதிர்த்தாலும் , யார் ஆதரித்தாலும் சரி இது வரலாற்றில் இடம்பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டுக்குழு
மசோதா மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. பெரும்பான்மையானோர் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்பி பரிசீலனை செய்ய வலியுறுத்தினர். இதனையடுத்து வக்பு சட்டத்திருத்த மசோதா பார்லி., கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.