சில நாடுகளின் போர் சாமானிய மக்களை பாதிக்கிறது: 'பிரிக்ஸ்' மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
சில நாடுகளின் போர் சாமானிய மக்களை பாதிக்கிறது: 'பிரிக்ஸ்' மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
ADDED : செப் 14, 2026 02:44 AM

புதுடில்லி: ''சில நாடுகளில் நடக்கும் போர் உலகளவில் சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் நிலையில், தொழில்நுட்பம் மற்றும் அரிய வகை கனிமங்களை ஆயுதமாக்குவது, உலகின் வளர்ச்சியையும், வளத்தையும் பாதிக்கும்,'' என, 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டின் இரண்டாவது நாளில், பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்தார்.
பிரிக்ஸ் அமைப்பின் இரண்டு நாள் உச்சி மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சி, டில்லியில் நேற்று நடந்தது.
ஒற்றுமை
உலக மக்கள் தொகையில் 49 சதவீதத்தையும், உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும், 11 நாடுகளை உள்ளடக்கிய இந்த மாநாடு, சரக்கு போக்குவரத்து வினியோக தொடர், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள், தொற்று நோய் கட்டுப்பாடு உள்ளிட்ட துறைகளில் கவனம் செலுத்தியது.
நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசிய தாவது:
உலக நாடுகளின் நிலைமை, பிரச்னைகள் வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால், ஒத்துழைப்புடன் செயல்பட்டால் அனைவரும் முன்னேற முடியும்.
நம்முடைய வேறுபாடுகள் நம் அடையாளமாக இருக்கட்டும்; ஒற்றுமை நமக்கு வலிமையாக இருக்கட்டும். அதன் பயன் மனிதகுலம் முழுமைக்கும் கிடைக்க வேண்டும்.
உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன், பிரிக்ஸ் நாடுகளின் பொதுவான நோக்கங்களை செயல்படுத்த முடிந்ததில் மகிழ்ச்சி. உலகில் மோதல்களும் பதற்றங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போர்களின் பாதிப்பு சாமானிய மக்களின் வாழ்க்கையில் அதிகமாக உள்ளது.
தொற்றுநோய், பருவகால பேரிடர், பொருட்கள் வினியோகத்தில் ஏற்படும் தடைகள் ஆகியவை, உலக நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருப்பதை உணர்த்தியுள்ளன.
ஒரு நாட்டில் ஏற்படும் நெருக்கடி, மற்ற நாடுகளையும் பாதிக்கிறது. எனவே, இது போன்ற சவால்களை எதிர்கொள்ளும் திறனை பிரிக்ஸ் நாடுகள் வலுப்படுத்த வேண்டும்.
சவால்களை முன்கூட்டியே கண்டறிந்து, அவற்றை எதிர்கொள்ள தயாராக இருப்பதுடன், தேவையான நேரத்தில் விரைவாக நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.
இதற்காக, தொற்று நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கான ஒருங்கிணைந்த எச்சரிக்கை அமைப்பை உருவாக்க ஒப்புக் கொண்டுள்ளோம்.
பேரிடர்களை எதிர்கொள்ளவும், தேவையான தகவல்களை விரைவாக பகிரவும் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான சரக்கு போக்குவரத்து மற்றும் வினியோக தொடரை மேலும் நம்பகமானதாகவும், தடைகளை சமாளிக்கும் வகையிலும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பம்
தொழில்நுட்பத்தையும், அரிய வகை கனிமவளங் களையும் ஒரு நாட்டுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துவது, அனைவரின் முன்னேற்றத்தையும் பாதிக்கும். எனவே, புதிய தொழில்நுட்பங்களின் பயன், அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கும் வகை யில் செயல்பட வேண்டும்.
பிரிக்ஸ் ஒத்துழைப்பு அரசுகளுடன் மட்டும் நின்றுவிடக் கூடாது. தொழில்முனைவோர், விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், பெண்கள், இளைஞர்களும் பங்கேற்க வேண்டும்.
இயற்கையை தாயாக மதிக்கும் பாரம்பரியம் இந்தியாவுக்கு உள்ளது. வளர்ச்சியும், சுற்றுச் சூழல் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல.
இரண்டையும் சமநிலையுடன் முன்னெடுத்துச் செல்வதே நிலையான வளர்ச்சி. வருங்கால தலைமுறையினருக்காக இதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
