ADDED : மார் 19, 2025 09:12 PM
மாண்டியா; ஆதரவற்றோர் இல்லத்தில் வழங்கப்பட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மாண்டியா, மலவள்ளி தாலுகா, டி.ககேபூர் கிராமத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
இவர்களுக்கு கடந்த 14ம் தேதி, தொழிலதிபர் ஒருவர் உணவு வழங்கினார். இந்த உணவை சாப்பிட்ட 25க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், 6ம் வகுப்பு மாணவர் கெர்லாங், 13, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, துணை எஸ்.பி., கிருஷ்ணப்பா தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, சித்தராஜு என்பவரின் ஹோட்டலில் தயாரிக்கப்பட்டு உள்ளது. சித்தராஜுவுக்கும், ஹோட்டலில் வேலை செய்யும் ஊழியர்களுக்கும் அடிக்கடி சண்டை நடந்து உள்ளது.
இதன் காரணமாக, சில ஊழியர்கள் ஹோட்டல் உரிமையாளருக்கு கெட்ட பெயரை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற காரணத்தால் உணவில் விஷம் கலந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.