வயநாட்டில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடத்தில் 7 ரிசார்ட்; இடித்து அகற்ற கேரளா உத்தரவு
வயநாட்டில் நிலச்சரிவு அபாயம் உள்ள இடத்தில் 7 ரிசார்ட்; இடித்து அகற்ற கேரளா உத்தரவு
ADDED : டிச 20, 2024 09:36 AM

திருவனந்தபுரம்: நிலச்சரிவு அபாயம் கொண்ட இடத்தில் அமைந்துள்ள 7 ரிசார்ட்டுகள் மற்றும் விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், குளங்கள் உள்ளிட்டவற்றை 15 நாட்களுக்குள் இடித்து அகற்ற, வயநாடு சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை 30ம் தேதி அதிகாலை வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை ஆகிய இரு கிராமங்கள் கனமழை, நிலச்சரிவு காரணமாக மண்ணில் புதையுண்டன. இதில் 400க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து, கேரளா அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அந்த வகையில், தற்போது, நென்மேனி பஞ்சாயத்து அம்புகுத்தி மலைத்தொடரில் அமைந்துள்ள 7 ரிசார்ட்டுகள் மற்றும் விதி மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், குளங்கள் உள்ளிட்டவற்றை 15 நாட்களுக்கு இடிக்க, வயநாடு சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சப் கலெக்டர் கூறியதாவது:
அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். உத்தரவை நிறைவேற்றாத பட்சத்தில், ஜனவரி 8ம் தேதி கட்டாயம் விளக்கமளிக்க வேண்டும். நென்மேனி கிராம அலுவலர் கண்காணித்து அறிக்கை அளிக்கும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவால், ஈகிள் நெஸ்ட் ரிசார்ட், ராக் வில்லா ரிசார்ட், எடக்கல் வில்லேஜ் ரிசார்ட் மற்றும் ஆஸ்டர் கிராவிட்டி ரிசார்ட் உட்பட 7 ரிசார்டுகள் இடித்து தரைமட்டமாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் வருங்காலத்தில் சுற்றுலா விடுதிகள் போன்றவற்றை கட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 28ம் தேதி நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில், மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த இடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இடங்களை ஆய்வு செய்ய சுல்தான் பத்தேரி தாசில்தார், மாவட்ட புவியியலாளர், அபாய ஆய்வாளர், மாவட்ட மண் பாதுகாப்பு அலுவலர், நிர்வாக பொறியாளர் ஆகியோர் அடங்கிய கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி டிசம்பர் 9ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி 15 நாட்களுக்கு இடிக்க, வயநாடு சப்-கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த நடவடிக்கையை வரவேற்கின்றனர். 'இந்த நடவடிக்கைக்காக நாங்கள் பல ஆண்டுகளாக வாதிட்டு வருகிறோம். உடனடியாக அமல்படுத்த வேண்டும்' என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.