அவர்கள் இல்லாமல் நாங்க இல்ல: சுற்றுலாப் பயணிகளை தோளில் சுமந்து காப்பாற்றிய பஹல்காம் வியாபாரி உருக்கம்
அவர்கள் இல்லாமல் நாங்க இல்ல: சுற்றுலாப் பயணிகளை தோளில் சுமந்து காப்பாற்றிய பஹல்காம் வியாபாரி உருக்கம்
ADDED : ஏப் 24, 2025 05:59 PM

ஸ்ரீநகர்: 'அவர்கள் இல்லாமல் எங்கள் வாழ்க்கை முழுமையடையாது' என சுற்றுலாப் பயணிகளை முதுகில் சுமந்து காப்பாற்றிய பஹல்காம் வியாபாரி சஜாத் அகமது பட் உருக்கமாக தெரிவித்தார்.
காஷ்மீர் மாநிலம், பஹல்காம் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, காயமடைந்த சுற்றுலாப் பயணியை உள்ளூர்வாசி ஒருவர் முதுகில் சுமந்து சென்று காப்பாற்றிய வீடியோ வைரலானது. காயமடைந்தவர்களை மீட்ட பஹல்காம் வியாபாரி சஜாத் அகமது பட் கூறியதாவது:
நானும், மற்ற உள்ளூர்வாசிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த சுற்றுலாப் பயணிகளுக்கு உதவ அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டோம். சுற்றுலாப் பயணிகள் இல்லாமல், பஹல்காம் உள்ளூர்வாசிகளின் வாழ்க்கை முழுமையடையாது. மதத்தை விட மனிதநேயம் முக்கியம்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து வாட்ஸ்அப் குரூப்பில் மெசேஜ் வந்தது. இதையடுத்து நான், உள்ளூர்வாசிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றேன்.நாங்கள் பிற்பகல் 3 மணியளவில் அங்கு சென்றடைந்தோம். காயமடைந்தவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, நடக்க முடியாதவர்களை முதுகில் சுமந்து சென்று காப்பாற்றினோம்.
அவர்களில் பலரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். சுற்றுலாப் பயணிகள் அழுவதைக் கண்டதும், என் கண்களில் கண்ணீர் வந்தது. அவர்களின் வருகை எங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி வைத்தது. அவர்கள் இல்லாமல் எங்கள் வாழ்க்கை முழுமையடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

