தமிழகத்தில் குடியுரிமை சட்டம் அமலாவதை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின், இ.பி.எஸ்., திட்டவட்டம்
தமிழகத்தில் குடியுரிமை சட்டம் அமலாவதை அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின், இ.பி.எஸ்., திட்டவட்டம்
UPDATED : ஜன 31, 2024 06:19 PM
ADDED : ஜன 31, 2024 02:05 PM

சென்னை: தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாவதை அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது: ஏழு நாட்களில் மேற்கு வங்கம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைப் படுத்தப்படும் என்று கூறியிருக்கிறார் பா.ஜ., வைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஒருவர்.
இலங்கைத் தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம் ஆனதற்கு முழு முதற் காரணமே பார்லி.,யில் அ.தி.மு.க ஆதரித்து ஓட்டளித்ததுதான். அப்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் போராட்டங்களை நடத்தியதுடன், இரண்டு கோடிப் பேரிடம் கையெழுத்து பெற்று அதனைக் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தது திமுக.
2021ல் ஆட்சிக்கு வந்த உடனே குடியுரிமை திருத்தச்சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்திச் சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றினோம். தமிழகத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் தி.மு.க அரசு ஒருபோதும் அனுமதிக்காது.
மதநல்லிணக்கத்துக்கு எதிரான பா.ஜ., அரசின் நாசகாரச் செயல்களையும், அதற்குத் துணைபோகும் அ.தி.மு.க.வின் நயவஞ்சக நாடகங்களையும் நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உறுதியாகச் சொல்கிறேன். தமிழகத்துக்குள் குடியுரிமை சட்டத்தை கால்வைக்க விட மாட்டோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
சும்மா இருக்காது
இது குறித்து அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியுரிமை திருத்தச்சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அ.தி.மு.க., ஒருபோதும் அனுமதிக்காது. குடியுரிமை திருத்தச் சட்டத்தால், தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டால் எங்கள் அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்பதை ஏற்கனவே எங்களது ஆட்சியின் போது சட்டசபையிலேயே நாங்கள் தெரிவித்தோம்.
ஆனால், மதவாத நாடக எதிர்ப்பு ஒன்றையே அரசியல் மூலதனமாக்கி, சிறுபான்மை மக்களை ஏமாற்றி, ஆட்சியில் இருக்கும்போது பா.ஜ., வுடன் கூட்டு, ஆட்சியில் இல்லாத போது எதிர்ப்பு என்று சிறுபான்மையினருக்கு துரோகம் செய்து வருகிறது திமுக. சிறுபான்மை மக்களின் காவலனாக வேஷம் போடும் தி.மு.க.,வின் நாடகத்தை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதிமுக என்றும் சிறுபான்மையின மக்களின் பக்கம் அரணாக நின்று இன்றும் அடக்குமுறை சட்டங்களை உறுதியாக எதிர்க்கும். இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.