உ.பி.,யை போலீஸ் ராஜ்யமாக மாற்ற விடமாட்டோம்: அலகாபாத் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
உ.பி.,யை போலீஸ் ராஜ்யமாக மாற்ற விடமாட்டோம்: அலகாபாத் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
ADDED : ஜன 31, 2026 02:59 AM

லக்னோ: 'உத்தர பிரதேசத்தை போலீஸ் ராஜ்யமாக மாற்ற அனுமதிக்க முடியாது' என எச்சரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், தங்களுக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிக்கும்படி, மாவட்ட நீதிபதிகளை போலீஸ் அதிகாரிகள் வற்புறுத்தி வருவதாகவும் கண்டனம் தெரிவித்தது.
உ.பி.,யில் குற்றங்களில் ஈடுபடுவோரை காலில் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வந்ததை அடுத்து, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, அந்த மாநில காவல் துறைக்கு அலகாபாத் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி அருண் குமார் சிங் தேஷ்வால் முன், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. உ.பி., - டி.ஜி.பி., ராஜிவ் கிருஷ்ணா, உள்துறை கூடுதல் தலைமை செயலர் சஞ்சய் பிரசாத் ஆகியோர், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் ஆஜராகினர்.
அப்போது, நீதிபதி அருண் குமார் சிங் தேஷ்வால் கூறியதாவது:
உ.பி.,யை போலீஸ் ராஜ்யமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டம் பின்பற்றப்படுவதில்லை. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படும் ஒரு வழக்கைக் கூட நான் பார்க்கவில்லை.
தங்களுக்கு சாதகமான உத்தரவுகளை பெறுவதற்காக, இளம் காவல் துறை அதிகாரிகள் மாவட்ட நீதிபதிகளுக்கு அழுத்தம் கொடுப்பது கவலை அளிக்கிறது.
மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கள் - நீதிபதிகள் இடையே மோதல் ஏற்படுவதும் வழ க்கமாகி விட்டது. ஒரு மாவட்டத்தில் இந்த மோதலை தவிர்க்கவே மாவட்ட நீதிபதியை இட மாற்றம் செய்ய வேண்டிய சூழல் உருவானது.
காவல் துறை மூத்த அதிகாரிகள் சில நேரங்களில் நீதிமன்ற அறைக்குள்ளேயே நுழைந்து நீதித்துறை நடவடிக்கைகளில் செல்வாக்கு செலுத்த முயல்வதாகவும் வழக்கறிஞர் சங்கத்தினர் புகார் தெரிவிக்கின்றனர். காவல் துறை அதிகாரிகள் தங்களை நீதிபதிகளுக்கு மேலானவர்களாகக் கருதக்கூடாது. சட்டத்திற்கு உட்பட்டே அவர்கள் பணியாற்ற வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.

