பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அரசை அகற்றுவோம்: காங்., ராகுல் பேச்சு
பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அரசை அகற்றுவோம்: காங்., ராகுல் பேச்சு
ADDED : டிச 15, 2025 03:49 AM

புதுடில்லி: உண்மை மற்றும் அகிம்சை வழியில் செயல்பட்டு, மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., அரசை அகற்றுவோம், என காங்கிரஸ் எம்.பி.,யும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் குறிப்பிட்டார்.
டில்லி ராம்லீலா மைதானத்தில், காங்., சார்பில் 'ஓட்டுத் திருடர்களே பதவியை விட்டு விலகுங்கள்' என்ற பேரணி நேற்று நடைபெற்றது.
இதில் பங்கேற்று ராகுல் பேசுகையில், ''மத்தியில் ஆளும் மோடி - ஆர்.எஸ்.எஸ்., அரசிடம் அதிகாரம் இருப்பதால், அவர்களுக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது. வாக்காளர் பட்டியலில் மோசடி போன்றவை நடக்கின்றன. உண்மை மற்றும் சத்தியத்தின் பக்கம் நின்று, அவர்களை அதிகாரத்தில் இருந்து அகற்றுவோம்,'' என்றார்.
இதைத் தொடர்ந்து அக்கட்சியின் பொதுச் செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்கா பேசுகையில், ''மக்களின் ஓட்டுரிமையை பறிக்க எப்படி அனுமதி அளித்தது என்பது குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது, பா.ஜ.,வால் அவரைக் காப்பாற்ற முடியாது,'' என்றார்.
முன்னதாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ''வாக்காளர் பட்டியல் மோசடியில் ஈடுபடுபவர்கள் துரோகிகள் மற்றும் நாடகக்காரர்கள், அவர்களை அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும்,'' என்றார்.

