ஒரு சொட்டு மழையைக் கூட காணோம்... இதுதான் உங்க அலர்ட்டா; கேட்கிறார் அன்புமணி
ஒரு சொட்டு மழையைக் கூட காணோம்... இதுதான் உங்க அலர்ட்டா; கேட்கிறார் அன்புமணி
ADDED : அக் 16, 2024 08:48 PM

சென்னை: சென்னைக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்ட விவகாரத்தில் பா.ம.க., தலைவர் அன்புமணி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதனால், சென்னை மக்கள் தங்களின் உடமைகளையும், வீடுகளையும் காப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை ஈடுபட்டனர். குறிப்பாக, போலீசார் அபராதம் விதித்தாலும் பரவாயில்லை, வெள்ளத்தில் இருந்து கார்களை காப்பாற்ற வேண்டும் என்று, அதனை முன்கூட்டியே பாலங்களில் நிறுத்தி வைத்தனர். அதேபோல, பைக்குகளையும் மேல் தளங்களுக்கு கொண்டு சென்று வைத்தனர். அதேபோல, படகுகள், மோட்டார்கள் என சென்னை மாநகராட்சியும் முழு ஆயத்த நிலையில் இருந்தது.
நேற்று பகலில் கொட்டிய மழை, பின்னர் இரவில் படிப்படியாக குறைந்தது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்வதால் அதி கனமழையில் இருந்து சென்னை உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் தப்பித்தது. இருப்பினும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (அக்.16) அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. ஆனால், எச்சரித்தபடி, மழை ஏதும் வராததால், நிம்மதியடைந்த சென்னைவாசிகள், பாலங்களில் நிறுத்தியிருந்த கார்களை வந்து எடுத்துச் சென்றனர்.
சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட குறித்து விளக்கம் அளித்த வானிலை நிபுணர் பாலச்சந்திரன், ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டதால், அனைத்து இடங்களிலும் பெரிய அளவில் 20 செ.மீ., க்கு மேல் மழை பெய்யும் என அர்த்தமில்லை என்றும், நாளை கரை அருகே வரும்போது மழை பெய்யும் வாய்ப்பை கருத்தில் கொண்டும், ஏற்கனவே இருந்த மழை அளவை கருத்தில் கொண்டும் ஓரிரு இடங்களில் கன முதல் அதிகனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.
அதிகனமழை என எச்சரிக்கை விடுத்து மக்களை பீதியில் ஆழ்த்திய சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செயலால் சென்னைவாசிகள் அதிருப்தி அடைந்தனர். அந்த வகையில், பா.ம.க., தலைவர் அன்புமணி, வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப்பதிவில், 'சென்னைக்கு இன்று ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று மாலை வரையில் ஒரு துளி கூட மழையைக் காணவில்லை. வானிலை நிலவரத்தை துல்லியமாக கணித்து, தகவலை வெளியிட்டால் மட்டுமே, பொதுமக்களும், அரசாங்கமும் அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட முடியும்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.