இயல்பை விட கூடுதல் வெப்பம்: வானிலை மையம் எச்சரிக்கை
இயல்பை விட கூடுதல் வெப்பம்: வானிலை மையம் எச்சரிக்கை
UPDATED : மார் 02, 2024 04:40 AM
ADDED : மார் 02, 2024 04:11 AM

புதுடில்லி: நம் நாட்டில், 'எல் நினோ'வின் தாக்கத்தால் கோடை காலத்தில் இயல்பை விட கூடுதல் வெப்பம் அலை வீசும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக டில்லியில் வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
நம் நாட்டில், எல் நினோ தாக்கம் நீடிப்பதால் கோடை காலத்தின் போது வடகிழக்கு தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா மற்றும் ஒடிசாவின் பல பகுதிகளில் இயல்பை விட, அதிக வெப்ப அலை வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், வட மற்றும் மத்திய பகுதிகளில், இந்த மாதத்தில் வெப்ப அலையை எதிர்பார்க்க முடியாது.
இதேபோல் மார்ச் மாதத்தில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு பதிவாகவும் வாய்ப்பு உள்ளது. இக்காலக்கட்டத்தில், சராசரியாக 3 செ.மீ., மழை பதிவாகும் நிலையில், 117 சதவீதம் கூடுதல் மழைப்பொழிவு இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மத்திய பசிபிக் பெருங்கடலில் நிலவும் சீதோஷ்ண நிலை காரணமாக, நம் நாட்டில் கோடை காலம் முழுதும் எல் நினோவின் தாக்கம் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

