ADDED : ஜூன் 11, 2026 10:40 PM

லக்னோ: உத்தர பிரதேசத்தின் மஹோ மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தண்ணீர் பிரச்னை காரணமாக இளைஞர்கள் பலர் திருமணம் ஆகாமல் தவிக்கின்றனர்.
உ.பி.,யில் உள்ள மஹோ மாவட்டத்தின் முத்ரா கிராமத்தில், 2,000 பேர் வசிக்கின்றனர். படித்து பலர் வேலை பார்த்து வரும் நிலையிலும் திருமண வயதை எட்டிய பல இளைஞர்கள் பெண் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
இதற்கு வேலையில்லா திண்டாட்டமோ, வரதட்சணை கொடுமையோ காரணம் அல்ல. தண்ணீர் பிரச்னை தான் காரணம். இந்த கிராமத்தினருக்கு பெண் தர முன்வந்த பலர், தங்கள் மகள் குடி தண்ணீர் எடுத்து வர பல மணிநேரம் குடத்துடன் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதை கேள்விப்பட்டதும் திருமண பேச்சை உடனே நிறுத்தி விடுகின்றனர்.
இந்த கிராமத்தில் மூன்று கைப்பம்புகள், ஒரு கிணறு மட்டுமே உள்ளன. இவற்றில் இரு பம்புகளில் வரும் தண்ணீர் உப்புதன்மை கொண்டது என்பதால் அவற்றை குடிநீராக பயன்படுத்த முடியாது. ஊருக்கு வெளியே உள்ள ஒரே ஒரு கைப்பம்புதான் கிராமத்தின் ஒரே குடிநீர் ஆதாரம். ஆனால் இந்த கிராமத்தில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் குழாய்கள் பொருத்தி தண்ணீர் சப்ளை நடப்பதாக மாநில அரசு கூறுகிறது.
நமாமி கங்கை திட்டத்தின் கீழ் இந்த கிராமத்தில் பல கோடி ரூபாய் செலவிட்டு குடிநீர் குழாயும், மேல்நிலை குடிநீர் தொட்டியும் அமைக்கப்பட்டது. குடிநீர் சோதனை ஓட்டம் கூட நடத்தப்பட்டது. ஆனால் குழாய்களில் வெறும் காற்று மட்டும் தான் வருகிறது. ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தண்ணீர் பிரச்னை நீடிப்பதால் இந்த கிராமத்துக்கு வேறு ஊர்க்காரர்கள் பெண் தருவதில்லை. எனவே, திருமண வயதை எட்டிய இளைஞர்கள் பெண் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
