UPDATED : ஜூன் 09, 2024 04:48 PM
ADDED : ஜூன் 09, 2024 10:49 AM

புதுடில்லி: பிரதமர் ஆக மோடி பதவியேற்கும் விழாவை முன்னிட்டு டில்லி களைகட்டியது. இலங்கை, மொரிஷியஸ், மாலத்தீவு அதிபர்கள், பூடான் மற்றும் வங்கே தேச பிரதமர் இந்தியா வந்துள்ளனர்.
மோடி 3வது முறையாக பதவியேற்கும் விழா இன்று (ஜூன் 09) இரவு 7: 15 மணிக்கு நடக்கிறது. இதற்காக டில்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. உலக தலைவர்கள், பல்வேறு மாநில கவர்னர்கள், முதல்வர்கள் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இவ்விழாவில், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது முயிசு, சீஷெல்ஸ் துணை அதிபர் அஹமது அபிப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரிஷியஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா, பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கே ஆகியோர் பங்கேற்கின்றனர்.இதற்காக ஷேக் ஹசீனா, அஹமது அபிப், ஆகியோர் நேற்று( ஜூன் 08) டில்லி வந்தனர்.
இந்நிலையில், மாலத்தீவு அதிபர் முகமது முயிசு இன்று காலை டில்லி வந்தார். அவரை வெளியுறவு அமைச்சக அதிகாரி பவன் கபூர் விமான நிலையத்தில் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து டில்லி வந்த மொரிஷியஸ் பிரதமர் பிரவின் குமார் ஜெகநாத்தை வெளியுறவு அமைச்சக அதிகாரி குமரன் வரவேற்றார். இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டில்லி வந்தனர்.
பூடான் பிரதமர் ஷெரீங் டோப்கேவை வெளியுறவு அமைச்சக அதிகாரி பவன் கபூர் டில்லி விமான நிலையத்தில் வரவேற்றார்.