குண்டர் அரசு; குண்டர்களுக்கான அரசு: குட்டு வைத்தார் கவர்னர்!
குண்டர் அரசு; குண்டர்களுக்கான அரசு: குட்டு வைத்தார் கவர்னர்!
ADDED : ஆக 18, 2024 07:20 AM

கோல்கட்டா: ''மேற்குவங்க மாநில அரசு குண்டர்களால், குண்டர்களுக்காக நடத்தப்படுகிறது. போக்கிரித்தனம் பரவலாக உள்ளது,'' என அம்மாநில கவர்னர் ஆனந்த போஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்த குற்றச்சாட்டை, அவர் மறுத்துவிட்டார். இதை அரசியலாக்க மம்தா கடும் முயற்சி செய்தார். கவர்னருக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். மம்தா பானர்ஜி மீது கவர்னர் தொடர்ந்த அவதூறு வழக்கில் மம்தாவிற்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது.
பூனைக்கு ஒரு காலம்!
யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும் என்பது போல, கோல்கட்டா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், அரசுக்கு கவர்னர் ஆனந்த போஸ் கண்டனம் தெரிவித்தார்.
ஆங்கில செய்தி சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி: மேற்கு வங்கத்தில் குண்டர்களால் அரசு நடத்தப்படுகிறது. இது குண்டர்களுக்கான அரசாக உள்ளது. போக்கிரித்தனம் பரவலாக உள்ளது. பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் வருத்தம் அளிக்கிறது.
அரசின் கடமை!
மாணவர்களிடையே அச்சமும், பாதுகாப்பின்மையும் நிலவுகிறது. பாதுகாப்பான சூழலை உருவாக்க அரசு தவறிவிட்டது. மக்களின் உயிர், உடைமைகளை பாதுகாப்பது அரசின் கடமை. மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், மருத்துவக் கல்லூரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்முறை எங்கு நடந்தாலும் அதை தடுக்க தவறினால், முதல்வர் தான் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.