ஆனந்த போஸ் ராஜினாமா: மேற்குவங்க கவர்னராக தமிழக கவர்னர் ரவி நியமனம்
ஆனந்த போஸ் ராஜினாமா: மேற்குவங்க கவர்னராக தமிழக கவர்னர் ரவி நியமனம்
UPDATED : மார் 05, 2026 11:00 PM
ADDED : மார் 05, 2026 08:02 PM

புதுடில்லி: மேற்குவங்க கவர்னர் ஆனந்த போஸ் ராஜினாமா செய்து உள்ளார். அவருக்கு பதிலாக தமிழக கவர்னர் ரவி, மேற்குவங்க கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று உள்துறை அமைச்சர் தன்னிடம் கூறியதாக மம்தா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.
மேற்கு வங்க சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால்,அங்கு அரசியல் களம் விறுவிறுப்பாக உள்ளது.
இந்நிலையில் அம்மாநில கவர்னராக உள்ள சி.விஆனந்த போஸ் தனதுபதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது டில்லியில் இருக்கும் அவர், ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் மேற்கு வங்க கவர்னராக மூன்றரை ஆண்டுகள் பதவி வகித்துள்ளார்.
ராஜினாமா செய்ததை உறுதி செய்துள்ள ஆனந்த போஸ், கவர்னர் பதவியில் போதுமான காலம் இருந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
1977 ம் ஆண்டுஐஏஎஸ் அதிகாரியான அவர், கடந்த 2022 நவ.,23 ல் மேற்குவங்கத்தின் 21வது கவர்னராக நியமிக்கப்பட்டார்.
அவருக்கும் முதல்வர் மம்தாவுக்கும் ஆரம்பம் முதலே தீராத மோதல் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மம்தா அதிர்ச்சி
இது தொடர்பாக மம்தா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: மேற்கு வங்க கவர்னர் பதவியில் இருந்து ஆனந்த போஸ் திடீரென ராஜினாமா செய்தது அதிர்ச்சியளிக்கிறது.அவரது ராஜினாமாவுக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. ஆனாலும், தற்போதைய சூழலில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக சில அரசியல் விருப்பங்களை பூர்த்தி செய்ய கவர்னருக்கு மத்திய உளதுறை அமைச்சரிடம் இருந்து சில அழுத்தம் ஏற்பட்டு இருந்தால் எனக்கு ஆச்சர்யம் இல்லை.
தமிழக கவர்னர் ஆர்என் ரவி மேற்கு வங்க கவர்னராக நியமிக்கப்பட்டுஉள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் என்னிடம் கூறியுள்ளார். இது குறித்து அவர் என்னிடம் அவர் ஆலோசிக்கவில்லை.இத்தகைய நடவடிக்கைகள் இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவை குறைத்து மதிப்பிடுவதோடு, நமது கூட்டாட்சி அமைப்பின் அடித்தளத்தையே தாக்குகின்றன. மத்திய அரசு கூட்டாட்சி கொள்கைகளை மதிக்கவேண்டும், ஜனநாயக மரபுகளையும், மாநிலங்களின் கண்ணியத்தையும் சிதைக்கும் ஒரு தலைபட்ச முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் மம்தா கூறியுள்ளார்.
