ADDED : ஆக 19, 2011 10:23 PM

கோல்கட்டா : மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, 'பஷிம் பங்கா' என, பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அரசும், எதிர்க்கட்சிகளும் ஒரு மனதாக முடிவு செய்துள்ளன.
மேற்கு வங்கம் மாநிலத்தின் பெயரை மாற்றுவது தொடர்பாக, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம், கோல்கட்டாவில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், மாநிலத்தின் பெயரை மாற்றுவது தொடர்பாக, 'பங்களா', 'பங்களா பூமி', 'பஷிம் பங்கா' உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
இதில், மம்தா பானர்ஜி பரிந்துரை செய்த, 'பஷிம் பங்கா' என்ற பெயர் அனைத்து கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, 'பஷிம் பங்கா' என்று மாற்ற முடிவு செய்யப்பட்டது.
மேற்கு வங்க பார்லிமென்ட் விவகார அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ''ஆங்கில அகர வரிசையில் மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் கடைசியாக உள்ளது. இது, மாநிலத்திற்கு மிகவும் பின்னடைவாக உள்ளது. எனவே, நிர்வாகக் காரணங்களுக்காக, மாநிலத்தின் பெயரை மாற்ற முடிவு செய்துள்ளோம். முதல்வர் பரிந்துரைத்த, 'பஷிம் பங்கா' அனைத்து கட்சியினராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்தப் பெயர் மாற்றம், மத்திய அரசின் ஒப்புதலுக்குப் பின்னர் அமலுக்கு வரும்,'' என்றார்.