ADDED : அக் 13, 2024 03:53 AM

புதுடில்லி : 'பிரதமர் மோடியை சந்தித்தபோது, கனடா நாட்டினரின் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தியதாக கனடா பிரதமர் ட்ரூடோ தெரிவித்துள்ள கருத்து முற்றிலும் தவறானது' என மத்திய அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
ஆசியான் மற்றும் கிழக்காசிய உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசுக்கு பிரதமர் மோடி சமீபத்தில் சென்றார். அங்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை அவர் சந்தித்தார்.
விரும்பவில்லை
இருவரும் நலம் விசாரித்துக் கொண்டதுடன் சில நிமிடங்கள் பேசினர். இந்த சந்திப்பு குறித்து ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மோடியுடன் என்ன பேசினேன் என்ற விபரத்துக்குள் செல்ல விரும்பவில்லை. எப்போதும் கூறுவதுபோல, கனடா நாட்டவர்களின் பாதுகாப்பு, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவது அரசின் அடிப்படை கடமையாகும். அதில்தான் நானும் கவனம் செலுத்தி வருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து, கனடா நாட்டினரின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதை மோடியிடம் ட்ரூடோ வலியுறுத்தியதாக பரவலாக பேச்சு எழுந்தது.
இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
முக்கியத்துவம்
'மோடியும், ட்ரூடோவும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். மற்றபடி பேச்சு எதுவும் நிகழவில்லை' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், கனடா உடனான உறவுக்கு இந்தியா முக்கியத்துவம் அளிக்கிறது.
ஆனால், கனடா மண்ணில் இருந்தபடி இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுபவர்களை அந்நாட்டு அரசு ஒடுக்காதவரை உறவில் ஏற்படும் உரசல்களை சரிசெய்ய முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.