டில்லியில் பா.ஜ., ஆட்சி; பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் சொல்வது என்ன?
டில்லியில் பா.ஜ., ஆட்சி; பிரதமர் மோடி உட்பட தலைவர்கள் சொல்வது என்ன?
ADDED : பிப் 20, 2025 02:03 PM

புதுடில்லி: 27 ஆண்டுக்குப் பின், டில்லியில் பா.ஜ., ஆட்சி அமைத்துள்ளது. டில்லியின் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்று கொண்டார். இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:
பிரதமர் நரேந்திர மோடி
டில்லி முதல்வராக பதவியேற்ற ரேகா குப்தாவுக்கு வாழ்த்துக்கள். இவர் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி தற்போது எம்.எல்.ஏ.வாகவும், முதல்வராகவும் உயர்ந்து உள்ளார். டில்லியின் வளர்ச்சிக்காக அவர் முழு வீச்சுடன் பாடுபடுவார் என்று நான் நம்புகிறேன்.
டில்லி முதல்வர், ரேகா குப்தா
வாக்குறுதியை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் இலக்கு. பிரதமர் மோடியின் கனவை நிறை வேற்றுவது 48 பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களின் பொறுப்பாகும்.
கோவா முதல்வர், பிரமோத் சாவந்த்
27 ஆண்டுகளுக்குப் பிறகு, டில்லி மக்களின் நலனுக்காக பாடுபட பா.ஜ.,வுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரதமர் மோடியின் தலைமையில், டில்லி மக்கள் வளர்ச்சிக்காக பா.ஜ.,வினர் பாடுபடுவார்கள்.
டில்லி அமைச்சர், மஞ்சிந்தர் சிங் சிர்சா
பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்துவது எங்களது கடமை. டில்லியை மீண்டும் சுத்தமான குடிநீர் மற்றும் காற்று கொண்ட பகுதியாக மாற்றுவோம். யமுனை நதியை சுத்தம் செய்வோம்.
ராஜஸ்தான் முதல்வர், பஜன்லால் சர்மா
பா.ஜ., அரசு பொதுமக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும். தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும்.
மத்திய அமைச்சர், ஹர்ஷ் மல்ஹோத்ரா
பிரதமர் மோடி டில்லியில் பெண்களுக்கு அதிகாரம் அளித்துள்ளார். தேர்தலில் பா.ஜ.,வுக்கு மக்கள் ஓட்டளித்ததை கருத்தில் கொண்டு, எங்கள் அரசு மக்களுக்காக பாடுபடும்.
ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால்
யமுனை நதியை விரைவில் சுத்தம் செய்யுமாறு நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் யமுனை கழிவுநீர் சூழ்ந்து காணப்படுகிறது. மீண்டும் யமுனை சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
டில்லி அமைச்சர், பர்வேஷ் வர்மா
எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை மிக பொறுப்புடன் செய்வேன். நேர்மையுடன் பணியாற்றுவேன்.
பீஹார் துணை முதல்வர், விஜய் குமார் சின்ஹா
டில்லியின் வெற்றி நாட்டின் வெற்றி. இது நாட்டின் உணர்வுகளின் வெளிப்பாடு. பிரதமர் மோடி ஒரு பெண்ணை முதல்வராக ஆக்கியுள்ளார், அவர் அனுபவம் வாய்ந்தவர். அவர் சொல்வதைச் செய்கிறார்.
டில்லி அமைச்சர், கபில் மிஸ்ரா
பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நாங்கள் செயல்படுத்துவோம்.

