விவசாயிகளுக்கான வாக்குறுதி என்னாச்சு: துணை ஜனாதிபதி
விவசாயிகளுக்கான வாக்குறுதி என்னாச்சு: துணை ஜனாதிபதி
ADDED : டிச 04, 2024 01:48 AM

புதுடில்லி,
டில்லியில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானை மேடையில் வைத்துக்கொண்டு, ''விவசாயிகளுக்கு தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஏன்,'' என கேள்வி எழுப்பினார்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் --- மத்திய பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் நுாற்றாண்டு விழா டில்லியில் நேற்று நடந்தது. இதில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது:
வேளாண் அமைச்சரிடம் ஒரு விஷயத்தை கேட்க விரும்புகிறேன். விவசாயிகளுக்கு மத்திய அரசு தந்த வாக்குறுதிகள் என்ன? அவை ஏன் நிறைவேற்றப்படவில்லை; அவற்றை நிறைவேற்ற நாம் என்ன செய்ய வேண்டும். கடந்த ஆண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆண்டும் அவர்களின் போராட்டம் தொடர்கிறது.
இவ்வாறு பேசினார்.
ஜக்தீப் தன்கரின் இந்த கேள்விக்கு, அமைச்சர் சவுகான் பதிலளிக்கவில்லை.