ஒருநாள் போட்டியில் இருந்து ரோகித், கோலி ஓய்வு எப்போது?
ஒருநாள் போட்டியில் இருந்து ரோகித், கோலி ஓய்வு எப்போது?
UPDATED : ஆக 11, 2025 07:37 AM
ADDED : ஆக 11, 2025 07:09 AM

மும்பை: ஆஸ்திரேலிய தொடருக்கு பின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ரோகித், கோலி ஓய்வு பெறலாம்.
இந்திய அணியின் 'சீனியர்' வீரர்கள் ரோகித் சர்மா 38, கோலி 36. இருவரும் 'டி-20', டெஸ்டில் இருந்து விடைபெற்றனர். ஒருநாள் போட்டியில் மட்டும் நீடிக்கின்றனர். 2027ல் தென் ஆப்ரிக்காவில் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் (50 ஓவர்) விளையாடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருடன் (அக்.19-25) விடைபெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சுப்மன் தலைமை
'டி-20', டெஸ்டில் இவர்கள் இல்லாமல் இந்திய அணி சாதித்து வருகிறது. இதே போல ஒருநாள் போட்டிகளிலும் அசத்தலாம். ரோகித்திற்கு பதிலாக ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் நியமிக்கப்படலாம். திறமையான இளம் வீரர்களுக்கு 2027ல் நடக்க உள்ள உலக கோப்பை தொடரில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அவசரம் இல்லை
இது குறித்து பி.சி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறுகையில்,''ஒருநாள் போட்டிகளில் கோலி, ரோகித் அனுபவம் வாய்ந்தவர்கள்.
இருவரும் சேர்ந்து 83 சதம், 25,000 ரன்னுக்கும் மேல் எடுத்துள்ளனர். இவர்கள் விஷயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டோம். ஓய்வு எண்ணம் இருந்தால், எங்களிடம் தெரிவித்து இருப்பர். உலக கோப்பை தொடரில் இவர்கள் இடம் பெறுவரா என கூற முடியாது.
செப்டம்பரில் நடக்க உள்ள ஆசிய கோப்பை 'டி-20' தொடருக்கான அணியை தேர்வு செய்வதில் கவனம் செலுத்துகிறோம்,''என்றார்.