தினமும் 3,000 மெட்ரிக் டன் கழிவுகளை எங்கே கொட்டுகிறீர்கள்: சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
தினமும் 3,000 மெட்ரிக் டன் கழிவுகளை எங்கே கொட்டுகிறீர்கள்: சுப்ரீம் கோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி
ADDED : ஜன 18, 2025 09:01 AM

புதுடில்லி: தினமும் உற்பத்தியாகும் 3,000 மெட்ரிக் டன் கழிவுகளை எங்கே கொட்டுகிறீர்கள்?என்று டில்லி மாநகராட்சியிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
டில்லியில் தொழில், கல்வி உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளும் சிறப்பாக இருக்கிறது. அதுமட்டுமின்றி தலைநகரம் என்பதால் மக்கள் அங்கு குடியேற அதிகம் விரும்புகின்றனர். இந்த சூழலில் தினமும் உருவாகும் குப்பைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனை அப்புறப்படுத்த டில்லி மாநகராட்சி சிரமப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வழக்கை, விசாரித்த சுப்ரீம் கோர்ட், நீதிபதி ஏ.எஸ். ஓகா தலைமையிலான அமர்வு, கூறியதாவது: தலைநகரில் ஒவ்வொரு நாளும் உற்பத்தியாகும் 3,000 மெட்ரிக் டன் திடக்கழிவுகளை எங்கே கொட்டுகிறீர்கள்? ஆறு மாதங்களில், இது 4,000 மெட்ரிக் டன் ஆகிவிடும். ஒரு வருடத்தில், இது 5,000 மெட்ரிக் டன்களாக இருக்கும்.
இது போன்ற ஒரு பிரச்னையை எதிர்கொண்டு எப்படி அமைதியாக இருக்க முடியும்? மத்திய அரசு கண்களை மூடிக்கொண்டு இருக்கக் கூடாது. இது நாட்டின் தலைநகரம். அதிகாரிகள் செயல்படவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
இதற்கிடையே, மூத்த வழக்கறிஞர் மேனகா குருசாமி, ஜனவரி 27ம் தேதி விரிவான பதிலை அளிப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட மற்றொரு மூத்த வழக்கறிஞர் அபராஜிதா சிங், 'மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே எந்த ஒருங்கிணைப்பும் இல்லை.
காசிப்பூர் குப்பை கிடங்கில் 45 லட்சம் மெட்ரிக் டன் குப்பை கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதை அப்புறப்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒரே ஒரு ஏஜென்சிக்கு மட்டும் தரப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு இந்த ஒப்பந்தம் தரப்பட வேண்டும் என்றார்.
இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் விரிவான பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.